வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மற்றும் புதிய ஜப்பான் தூதுவருக்கிடையில் சந்திப்பு
இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவரான மிசுகோஷி ஹிடேகி மற்றும் வெளி நாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கருத்து தெரிவிக்கும் போது ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகளை நினைவு கூர்ந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
1951 ஆம் ஆண்டிலிருந்து கொழும்பு திட்டத்தின் கீழ் பல துறைகளில் ஜப்பான் இலங்கைக்கு விரிவான உதவிகளையும் பயிற்சி வாய்ப்புக்களையும் தொடர்ச்சியாக வழங்கி வருகிறது.
சென் பிரான்ஸிஸ்கோ சமாதா மாநாட்டில் இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன ஆற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையைத் தொடர்ந்து, ஜப்பான் அரசாங்கமும் அதன் மக்களும் இலங்கைக்கு ஒற்றுமையின் அடையாளமாகப் பெரிதும் உதவியுள்ளனர்.
ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையானது இரு நாடுகளுக்கும் இடையில் நீடித்த நட்புறவை வெளிப்படுத்தும் வகையில் ஜப்பான் இலங்கைக்கு வழங்கிய குறிப்பிடத்தக்கப் பரிசுகளில் ஒன்றாகும்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி திட்டம், களனி ஆற்றின் மீது புதிய பாலத்தை நிர்மாணிப்பதற்கான திட்டம் மற்றும் அநுராதபுர நீர் வழங்கல் திட்டம், கண்டி நகரக் கழிவு நீர் முகாமைத்துவ திட்டம் போன்ற ஜப்பானிய நிதியில் இலங்கையில் அண்மைக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட பாரிய அபிவிருத்தி திட்டங்களுக்காக நன்றியும் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புவி சார்ந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு திட்டத்தை டிஜிட்டல் மயமாக்குவதானது பெரும் மதிப்பு வாய்ந்ததாக இருக்கும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.