எரிபொருள் நெருக்கடி: சனிக்கிழமையை விடுமுறை தினமாக அறிவிக்குமாறு கோரிக்கை
நாட்டில் நிலவும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக, சனிக்கிழமைகளை விடுமுறை தினமாக அறிவிக்குமாறு மருத்துவ நிபுணர்கள் சங்கம் (AMS) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மருத்துவ நிபுணர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
போக்குவரத்து செலவு
குறிப்பாக வெளிமாவட்டங்களில் பணிபுரியும் வைத்தியர்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. ஒரு நாளைக்கு பலமுறை பணிக்குச் செல்வதால் போக்குவரத்துச் செலவு பெருமளவு அதிகரித்துள்ளது.

ஏனைய அரச ஊழியர்களுக்கு எரிபொருள் விலைக்கேற்ப கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், மருத்துவ நிபுணர்களுக்கு முறையான போக்குவரத்து ஈடுசெய்தல் (Compensation) வழங்கப்படுவதில்லை.
இந்த நிலைமையால் வைத்தியர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இது தூர பிரதேசங்களில் வழங்கப்படும் விசேட மருத்துவச் சேவைகள் பாதிக்கப்படும் அபாயத்தைத் தோற்றுவித்துள்ளது.
சனிக்கிழமையை விடுமுறை
மருத்துவ நிபுணர்கள் சங்கம் பின்வரும் தீர்வுகளை முன்வைத்துள்ளது: சனிக்கிழமையை விடுமுறை தினமாக அறிவித்து, வேலை வாரத்தை (Working Week) திருத்தியமைத்தல்.

தற்போதைய எரிபொருள் விலைக்கு ஏற்ப, காலாவதியான போக்குவரத்து கொடுப்பனவுகளை உடனடியாகத் திருத்தியமைத்தல்.
விசேட நிபுணர்கள் மேற்கொள்ளும் மேலதிகக் கடமைகளுக்கான (Extra Duties) கொடுப்பனவு முறையில் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வருதல்.
தொடர்ச்சியான சுகாதாரச் சேவையை உறுதிப்படுத்துவதற்கு, அதிகாரிகளுடன் அவசரப் பேச்சுவார்த்தைகளை நடத்தி உடனடித் தீர்வுகளைக் காண வேண்டும் என சங்கம் வலியுறுத்தியுள்ளது.