சீனாவுடன் இணைந்து துறைமுக நகர திட்டம் - சில நாடுகளுக்கு தடுக்கும் தேவை இருக்கலாம் என சந்தேகம்
உலகின் அடுத்த வல்லரசாக சீனா மாறும் என்பதால், இலங்கை சீனாவுடன் இணைந்து துறைமுக நகர திட்டத்தை உருவாக்குவது அமெரிக்காவுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக தற்போதைய அரசாங்கத்தின் ஆதரவு வழங்கி வரும் முன்னணி பிக்குவாக மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த துறைமுக நகர திட்டத்தை எதிர்க்கும் குழுவினர் யார்?. அவர்களை வழிநடத்துவது யார் என்பது குறித்து எண்ணிப்பார்க்க வேண்டும்.
அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுக்கு இதனை தடுக்கும் தேவை இருக்கலாம். சீனாவே உலகில் அடுத்த வல்லரசாக மாறும் என்பதே இதற்கு காரணம்.
சீனாவுடன் மேற்கொள்ளப்படும் இந்த கொடுக்கல், வாங்கல்கள் இந்த நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நிலைப்பாடு அந்நாடுகளுக்கு உள்ளது. தமது வர்த்தகங்களை வேறு நாடுகளில் முன்னேற்றும் வேலைத்திட்டம்.
அந்த வேலைத்திட்டத்தில் சீனா இருக்கின்றது. ஐரோப்பிய நாடுகளில் கூட வீதி கண்காட்சிகளை நடத்தி அவர்கள் இலங்கைக்கு முதலீட்டாளர்களை கொண்டு வருவார்கள்.
சீனா துறைமுக நகரத்தை நிர்மாணித்தாலும் சீனா மாத்திரம் இதில் வர்த்தகம் செய்யாது. இது குறித்து நாங்கள் மாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடினோம்.
நாட்டின் கலாச்சாரம், சமயம், ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படாவிட்டால், எதிர்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என மாநாயக்க தேரர்கள் கூறினார்கள். ஆணைக்குழுவாக நியமிக்க எடுத்த தீர்மானத்தை நாங்கள் சரியான தீர்மானமாக கருதுகிறோம்.
இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் இந்த ஆணைக்குழுவில் நியமிக்கப்படுவார்களா இல்லையா என்பது குறித்து சரியான முடிவை எடுக்க வேண்டும்.
நாட்டின் பிரஜைகள் மாத்திரமே ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் எனவும் அபயதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.