1000 ரூபா சம்பளம் தருவதாக ஏமாற்றிய கம்பனிகள்! மஸ்கெலியாவில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
மஸ்கெலியா மரே தோட்டத்தின் 7 பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் இன்று தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பதாதைகளை ஏந்திய வண்ணம், கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
மரே தோட்டத்தைச் சேர்ந்த போரஸ் பிரிவு, நல்லதண்ணி மேல்பிரிவு, கீழ்பிரிவு, வலதல பிரிவு, கெடஸ் பிரிவு, புதுக்காடு பிரிவு, ராஜ மலை பிரிவு ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்களே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
1000 ரூபா சம்பள அதிகரிப்பைத் தருவதாகக் கூறிய கம்பனிகள் தற்போது தம்மை ஏமாற்றியுள்ளதாகவும், முன்னர் நாளொன்றுக்கு 16 கிலோகிராம் பச்சைத் தேயிலையைப் பறித்து வந்த நிலையல் இன்று அது 20 கிலோவரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.





