நாட்டில் டெங்கு நோயாளர்களின் இறப்பு வீதம் அதிகரிப்பு - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளதாகவும், பொதுமக்கள் சற்று அவதானமாக இருக்குமாறும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்தியர் பிரஷிலா சமரவீரா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,459 -ஐ தாண்டியுள்ளதாகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30-ஆகவும் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போது பதிவான எண்ணிக்கையில் எதிர்காலத்தில் அதிகரிப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக வைத்தியர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இதன் காரணமாக, தமது சுற்றுப்புறச் சூழலை முடிந்தளவு சுத்தமாக வைத்துக் கொள்வது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
இது தொடர்பில், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்தியர் பிரஷிலா சமரவீரா கருத்து தெரிவிக்கையில்,
மக்கள் இந்த வார இறுதி நாட்களைப் பயன்படுத்தி தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் சுத்தம் செய்ய வேண்டும், இது நமது நாடு, நமது நாட்டைத் தூய்மையாக வைத்திருப்பது நமக்கு முக்கியம்.

அது இந்த நோயைக் குறைக்க உதவும். எனவே, தயவுசெய்து இதில் கவனமாக இருங்கள். ஒருவருக்கு இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், அவருக்கு டெங்கு இருக்கிறதா இல்லையா என்பதை அறிய அவர் ஒரு தகுதிவாய்ந்த வைத்தியரை அணுக வேண்டும்.
அதைக் கண்டறிய உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று இரத்தப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.
டெங்கு இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டு உறுதிசெய்யப்படும் வரை, பெரசிட்டமோல் வகை மருந்துகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். காய்ச்சலைக் குறைக்க, நீங்கள் இதில் சிறப்பு கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.