பிரதான அரச வைத்தியசாலையின் பணியாளர்களில் பலர் போதைப் பொருளுக்கு அடிமை
பிரதான அரச வைத்தியசாலை ஒன்றில் பணியாற்றி வரும் அநேக பணியாளர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதாக அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையின் மிகப் பிரதானமான வைத்தியசாலை ஒன்றில் பணியாற்றி வரும் சிற்றூழியர்களில் அரைவாசிப் பேர், ஐஸ் எனும் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு அடிமையாகியுள்ளதோடு விற்பனையிலும் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் பாவனை
இந்த வைத்தியசாலையில் சுமார் 1500 சிற்றூழியர்கள் கடமையாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் அநேகமானோர் ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்துவதுடன், விற்பனையிலும் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு என்பனவற்றுக்கு முறைப்பாடு செய்ய வைத்தியசாலை நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
போதைப்பொருள் பயன்படுத்தும் சிற்றூழியர்கள் பணிக்கு சமூகமளிப்பதில்லை போலி ஆவணங்களை சமர்ப்பித்து பணிக்கு சமூகமளித்தது போன்று காண்பித்துக்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதிகாரிகளின் உத்தரவுகளை உதாசீனம் செய்யும் பணியாளர்கள்
போதைப்பொருள் பயன்படுத்தும் பணியாளர்கள் உயர் அதிகாரிகளின் உத்தரவுகளை உதாசீனம் செய்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் செல்லிடப்பேசி, பணப்பை உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் களவாடப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் வைத்தியசாலை கட்டமைப்பு பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.