கூடாரங்களில் தவிக்கவிட்டுள்ள பேரிடரினால் பாதிக்கப்பட்ட மலையக மக்கள் - மனோ கணேசன் குற்றச்சாட்டு
பாதுகாப்பான காணி இல்லை என்ற காரணத்தைக்கூறி, 'டித்வா' பேரிடரினால் பாதிக்கப்பட்ட மலையக அகதிகளை அநுர அரசு இன்னமும் தற்காலிக கூடாரங்களிலேயே தவிக்கவிட்டுள்ளது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெத்யூ டக்வொர்த்துக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தூதுக்குழுவினருக்கும் இடையில் இன்று(21.06.2026) கொழும்பில் நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை உத்தியோகபூர்வமாக எடுத்துரைத்துள்ளார்.
மீள்குடியேற்றத்தை விரைவுபடுத்தல்
டித்வா புனருத்தாரணப் பணிகளுக்காக, இலங்கைக்குப் பாதுகாப்பான நிலத்தைத் தெரிவு செய்வது எப்படி என்ற தொழில்நுட்ப உதவிகளை அவுஸ்திரேலியா அரசு வழங்குவது குறித்துத் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்த மனோ கணேசன் எம்.பி. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தைப் பலப்படுத்துவதற்கு அவுஸ்திரேலியா அரசு வழங்கி வரும் ஆதரவுக்காகத் தூதுக்குழு சார்பாக நன்றியையும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,
டித்வா பேரிடரினால் பாதிக்கப்பட்ட மலையகக் குடும்பங்களுக்கான மீள்குடியேற்றத்துக்குப் பொருத்தமான காணிகளை அடையாளம் கண்டு விடுவிப்பதில், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் உத்தியோகபூர்வ அனுமதி தாமதமே தற்போதைய பிரதான தடையாகக் காணப்படுகின்றது.
டிஜிட்டல் வரைபடமாக்கல்
டிஜிட்டல் வரைபடமாக்கல் மற்றும் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்துவதற்காக அவுஸ்திரேலியா வழங்கும் ஆதரவானது, பாதிக்கப்படக்கூடிய எமது மலையகச் சமூகங்களின் பாதுகாப்பான மற்றும் நிலையான மீள்குடியேற்றத்தை விரைவுபடுத்த உதவும் மிக முக்கிய பங்களிப்பாகும்.
உங்களது நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் இலங்கை அரசுக்கு வழங்கப்படும் வேளைகளில், அவை உண்மையாகவே பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்குப் பயன்படுகின்றதா என்பதை அவுஸ்திரேலியத் தரப்பு நேரடியாகக் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்த விசேட இராஜதந்திரச் சந்திப்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பாக அதன் தலைவர் மனோ கணேசன் எம்.பியுடன், இரத்தினபுரி பிரதேச சபையின் உப தவிசாளரும் ஜ.ம.முவின் சிரேஷ்ட உப தலைவருமான சந்திரகுமார், சர்வதேச விவகாரங்கள் தொடர்பான உப தலைவர் பாரத் அருள்சாமி ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
அத்துடன், அவுஸ்திரேலியத் தரப்பில் உயர்ஸ்தானிகர் மெத்யூ டக்வொர்த், துணைத் தூதுவர் ரூத் பைர்ட் மற்றும் அரசியல் அதிகாரி மெத்யூ லார்ட் ஆகிய முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.