மலைநாடும் மயிலத்தமடுவும் உங்கள் பட்டியலில் கடைசியா: கடும் சீற்றத்துடன் மனோ கேள்வி
கொழும்பாக இருந்தாலும், மலைநாடாக இருந்தாலும், வடக்காக இருந்தாலும், கிழக்காக இருந்தாலும், எங்களுக்கு இனியும் இருட்டறையில் நின்று வழி தேடி தடுமாற முடியாது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும், எத்தனை பிரதமர் ரணில்? எத்தனை ஜனாதிபதி ரணில்? எத்தனை வாக்குறுதி? மலைநாடும், மயிலத்தமடுவும் பட்டியலில் கடைசியா?" என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
தேசிய இனப்பிரச்சினை
"இந்நாட்டில் சுதந்திரம் பெற்றோம் என நாம் கொண்டாடும் பெப்ரவரி 4ஆம் திகதி இவ்வருட தினத்துக்கு முன், தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு என நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குறுதி அளித்தார்.
அவரது அரசு தேர்தல்களை பிற்போட சர்வஜன வாக்கெடுப்பு என்று பேசுகிறது. அவர் நேரடியாக சொன்னாலும், அவருக்கு நேரடி நெருக்கமாக அவரது அரசில் இருப்போர் சொன்னாலும் எமக்கு ஒன்றுத்தான்.
இப்போது ஜனாதிபதி முறைமையை அகற்ற போகிறேன் என்கிறார். முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை துணைக்கு அழைத்துக்கொண்டு நாடாளுமன்ற தேர்தல் முறையை மாற்றி தமிழ் பேசும் பிரதிநிதித்துவங்களுக்கு ஆப்பு வைப்பேன் என சொல்லாமல் சொல்கிறார்.
"பிரிட்டீஷ் ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸை அழைத்து, உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு விசாரணையை கையளிப்போம் என நாடாளுமன்றம் வந்து வாக்குறுதி அளித்தார்.
இப்போது ஜெர்மனிக்கு சென்று சர்வதேச விசாரணை கிடையவே கிடையாது என்கிறார்.
மனோ கணேசன் திட்டம்
உள்ளூரில் மீண்டும் நாடாளுமன்ற குழு அமைப்பதாக சொல்கிறார். பெருந்தோட்ட துறையில் காணி பிரச்சினைக்கு இதோ தீர்வு, அதோ தீர்வு என்று இவரது அரசாங்க அமைச்சர்கள் இரண்டு பேர், "ஒருவர் பெருந்தோட்டம், அடுத்தவர் தோட்ட உட்கட்டமைப்பு" சொன்னார்கள்.
ஆனால் ஒன்றையும் செய்யவில்லை. இந்த அமைச்சர்கள் இந்த பதவிகளுக்கு வர முன்னமே ஒரு சம்பவம் இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்தது.
இதை இவர்கள் படித்து அறிய வேண்டும். இன்றைய ஜனாதிபதி விக்ரமசிங்க இதே நாடாளுமன்றத்தில், பிரதமராக சில காலம் இருந்த போது, நாடாளுமன்றத்தில் நான் எழுப்பிய கோரிக்கையை ஏற்று, உடனடியாக பெருந்தோட்டங்களில் உள்ள பயிரிடப்படாத தரிசு நிலங்களை பிரித்து பெருந்தோட்ட குடும்பங்களுக்கு வழங்குகிறேன் என வாக்குறுதி அளித்தார்.
அதற்கு “மனோ கணேசன் திட்டம்” என பெயரும் வைக்கிறேன் எனவும் பகிரங்கமாக நாடாளுமன்றத்தில் வாக்குறுதி வழங்கினார்.
“ஐயா சாமி, எனது பெயர் வேண்டாம், எனது மக்களுக்கு காணி கொடுங்கள். அது போதும்” என்று அப்போதே நான் திருப்பி அவருக்கு சொன்னேன்.
இன்று எங்கே அந்த பெருந்தோட்டங்களில் உள்ள பயிரிடப்படாத தரிசு நில காணிகள்?
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீனத்தில் இருந்து நாடு திரும்பிய உடன் அவரை நான் சந்திக்க விரும்புகின்றேன்.
மலைநாடும், மயிலத்தமடுவும் பட்டியலில் கடைசியா
சந்தித்து இந்த கேள்விகளை எல்லாம் அவரிடம் தனிப்பட்ட முறையில் நேரடியாக நானே எழுப்ப உள்ளேன்.
எடுத்த எடுப்பிலேயே நாடாளுமன்றத்தில் அனைவர் முன்னிலையிலும் இவற்றை எழுப்பி, தனிப்பட்ட முறையில் அவரை நன்கு அறிந்த நான் நாட்டின் ஜனாதிபதியை தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்க விரும்பவில்லை.
வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமை தொடர்பில், வெளியே சொல்ல முடியாத காரணங்கள் இருந்தாலும் அவர் என்னிடம் சொல்வார் என நம்புகிறேன்.
அவற்றை அப்படியே வெளியே வந்து சொல்ல அவர் விரும்பாவிட்டால் நான் வெளியிடவும் மாட்டேன்.
ஆனால், இவை பற்றிய தெளிவை நான் தேடுகிறேன். கொழும்பாக இருந்தாலும், மலைநாடாக இருந்தாலும், வடக்காக இருந்தாலும், கிழக்காக இருந்தாலும், எங்களுக்கு இனியும் இருட்டரையில் நின்று வழி தேடி தடுமாற முடியாது.
ஆகவே, எத்தனை பிரதமர் ரணில்? எத்தனை ஜனாதிபதி ரணில்? எத்தனை வாக்குறுதி? மலைநாடும், மயிலத்தமடுவும் பட்டியலில் கடைசியா?" என்றார்.
