நிலக்கரி ஊழலை மறைக்கிறாரா அநுர..! மனோ கணேசன் எம்.பி கேள்வி
தற்போதைய அரசு வரலாற்றில் முதன்முறையாக ஊழலை நிறுவனமயப்படுத்தியுள்ளது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(11.03.2026) நடைபெற்ற பொது எதிரணி ஊடக மேடையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியாக பதவியேற்று கோல்ப் விளையாட சென்ற டிரம்பிற்கு பாதுகாப்பு - இலங்கையிலிருந்து சுட்டிக்காட்டப்படும் விடயம்
இது ஒரு தேர்தல் கூட்டணியோ அல்லது அரசியல் கூட்டணியோ அல்ல எனத் தெளிவுபடுத்திய அவர், நாட்டின் பொதுவான பிரச்சினைகள் குறித்துப் பேசவே தாமும் வி. இராதாகிருஷ்ணன் எம். பியும் இங்கு வந்துள்ளதாக மனோ கணேசன் எம்.பி சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசின் மீது முன்வைக்கப்பட்டுள்ள நிலக்கரி ஊழல் மற்றும் 323 கொள்கலன்கள் தொடர்பான ஊழல்கள் பாரிய கறையாகப்படிந்துள்ளன என மனோ எம்.பி. தெரிவித்தார்.
நிலக்கரி ஊழல்
கடந்த கால ஊழல்களை விடவும், இன்று இந்த அரசு மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படும் நிலக்கரி ஊழல் தொகை பல மடங்கு பெரியது. திருடப்பட்ட இந்த நிதி இரகசிய வைப்பில் வைக்கப்பட்டுள்ளதா? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது குறித்து என்.பி.பி. அரசு பதிலளிக்க வேண்டும் என அவர் கேள்வி எழுப்பினார்.
323 கொள்கலன்கள் சுங்கச் சோதனை இன்றி விடுவிக்கப்பட்ட விவகாரம் குறித்துக் கடும் விமர்சனங்களை முன்வைத்த அவர், "இந்தக் கொள்கலன்களை வரிசையாக நிறுத்தினால் களனிப் பாலத்தைத் தாண்டி வத்தளை வரை செல்லும்.

இவற்றைச் சோதனை இன்றி வெளியே போகவிட்டது யார்? ஜனாதிபதியா, துறைசார் அமைச்சரா அல்லது சுங்கப் பணிப்பாளரா? என்று வினவினார்.
ஊழல் விசாரணை ஆணைக்குழு
இது குறித்து ஆராய வேண்டிய நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஏன் இன்னும் சரியாகச் செயற்படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க, முதலில் அரசின் மீது புள்ளிவிவரங்களுடன் முன்வைக்கப்பட்டுள்ள புகார்களை விசாரிக்க வேண்டும் என்றும் மனோ எம்.பி. கேட்டுக்கொண்டார்.
அதுவே அவருக்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசின் ஊழல்களைப் பற்றிப் பேசினால், சமூக ஊடகங்கள் ஊடாகத் தரக்குறைவான தாக்குதல்கள் நடத்தப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இவ்வாறான அச்சுறுத்தல்களுக்குத் தான் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்றார்.
மற்றவர்களைப் பார்த்து 'திருடன்' என விரல் நீட்டுவதை விடுத்து, உங்கள் மீதான புகார்களுக்குப் பதில் சொல்லுங்கள். அதுவே நேர்மையானது என சவால் விடும் வகையில் பேசியுள்ளார்.