மன்னாரில் சுகாதார பணியாளர்களுக்கு 2வது தடவையாகவும் எரிபொருள் விநியோகம்
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் பணிபுரியும் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமேல் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் ஆகியோரின் ஏற்பாட்டிலே இன்று 2வது தடவையாகவும் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் எரிபொருள் பிரச்சினை உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தமது அத்தியாவசிய தேவைகளுக்கு எரிபொருள் வழங்க கோரி மன்னாரில் கடந்த முதலாம் திகதி சுகாதார பணிப்பாளர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
எரிபொருள் வழங்கல்
இதன்போது கோரிக்கை அடங்கிய மனு ஒன்றையும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கையளித்திருந்தனர்.
இந்நிலையில் சுகாதார ஊழியர்களின் கோரிக்கையின் அடிப்படையில் முதல் கட்டமாக கடந்த 2ஆம் திகதி விசேட ஏற்பாட்டின் கீழ் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டது.
வைத்தியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் மேற்பார்வையில், கடற்படை, இராணுவம் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் எவ்வித தடங்கலும் இன்றி எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








