மன்னாரில் கூடிய விலைக்கு விற்கப்படும் மரக்கறிகள்
நாட்டில் ஏற்பட்டுள்ள 'கோவிட் ' வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் அமுல் படுத்தப்பட்ட பயணத்தடை இன்று(25) செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்குத் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்திலும் பயணத்தடை இன்று(25) செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்குத் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்ய வர்த்தக நிலையங்களை நாடியுள்ளனர்.
அத்தியாவசிய பொருட்கள் விற்பனை மற்றும்,மீன்,மரக்கறி விற்பனை நிலையங்கள் ஆகியவை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மன்னார் பஸார் பகுதியில் உள்ள சில மரக்கறி விற்பனை நிலையங்களில் அதி கூடிய விலைக்கு மரக்கறி வகைகள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட அளவு மரக்கறி விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ள போதும் ஒவ்வொரு மரக்கறி விற்பனை நிலையங்களிலும் நூற்றுக்கணக்கான நுகர்வோர் ஒரே நேரத்தில் பொருட்களைக் கொள்வனவு செய்யச் செல்கின்றனர்.
இதன் போது மரக்கறி வகைகள் சில விற்பனை நிலையங்களில் கூடிய விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட நுகர்வோர் தெரிவித்தனர்.
ஒரு கிலோ மரக்கறி 300 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே இவ்விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு மரக்கறி வகைகளைக் கட்டுப்பாட்டு விலையில் விற்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்விடையம் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மெல் அவர்களை வினவிய போது,
மன்னாரில் சில மரக்கறி விற்பனை நிலையங்களில் அதி கூடிய விலைக்கு மரக்கறி விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடு கிடைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான விற்பனை நிலையங்கள் அடையாளம் காணப்படும் பட்சத்தில் அவர்கள் மரக்கறி
பொருட்களைக் கொள்வனவு செய்யச் சென்று வருவதற்கான பாஸ் ரத்து செய்யப்படும்.என
அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

