மன்னார் மடு திருத்தல ஆடித் திருவிழா
மன்னார் மடு திருத்தலத்தில் ஆடித் திருவிழா எதிர்வரும் 2ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம் நேற்று மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கூட்டத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, குரு முதல்வர் அருட்தந்தை ஏ.விக்டர் சோசை அடிகளார், மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் தொற்றின் காரணமாக மடு திருவிழா வழமைபோல் இடம் பெற்றாலும் யாத்திரிகர்கள் வருகை தடை செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை மருதமடு அன்னையின் ஆடிமாத திருவிழா தொடர்பாகவும், குறித்த திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள், சுகாதார நடைமுறைகள், ஏனைய விடயங்கள், ஏற்பாடுகள் குறித்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, உரிய திணைக்களங்களுக்கு பொறுப்புகளும் வழங்கப்பட்டன.
குறித்த திருவிழா வழமைபோன்று இடம் பெற்றாலும் யாத்திரிகர்கள் திருவிழா திருப்பலியில் பங்குபற்ற முடியாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திருவிழாத் திருப்பலி எதிர்வரும் ஆடி மாதம் 2ஆம் திகதி காலை 6.15 மணிக்கு மறைமாவட்ட ஆயர்களினால் கூட்டுத் திருப்பலியாக ஒப்பு கொடுக்கப்பட உள்ளதுடன், அதனைத் தொடர்ந்து மேலும் பல திருப்பலிகள் ஒப்புக் கொடுக்கப்படவுள்ளது.
இதில் மன்னார் மறைமாவட்ட பகுதிகளிலுள்ள குறிக்கப்பட்ட 30 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு, வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தந்து பக்தர்கள் கலந்து கொள்ள முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.