மன்னாரில் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் கவலை
மன்னாரில் கடற்றொழில் கிராமங்களில் ஒன்றான பள்ளிமுனை கிராம கடற்றொழிலாளர் தமது படகுகளை கடலுக்குள் இழுத்துச் சென்று கடற்றொழிலை மேற்கொள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு நாளாந்தம் முகம் கொடுத்து வருவதாக குறித்த கிராம கடற்றொழிலாளர் கவலை தெரிவித்துள்ளனர்.
பள்ளிமுனை கடற்கரையில் இருந்து கடலுக்குள் படகுகளை இழுத்துச் செல்லும் ஓடையில் தற்போது நீர் வற்றிய நிலையில் காணப்படுகிறது. இதனால் கடற்றொழிலாளர் தமது படகுகளை கடலுக்குள் இழுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர் கவலை
குறித்த ஓடை தோண்டப்பட்டு விரிவுபடுத்தப்பட்டால் மாத்திரமே கடற்றொழிலாளர் எவ்வித தடங்கலும் இன்றி தமது படகுகளையும் ஏனைய கடற்றொழில் உபகரணங்களையும் கொண்டு செல்ல முடியும் என தெரிவித்துள்ளனர்.
பள்ளிமுனை கிராமத்தில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட கடற்றொழில் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். கடற்றொழிலை நம்பி வாழ்ந்து வரும் அவர்கள் ஒவ்வொரு வருடமும் குறித்த பிரச்சினைக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
குறித்த ஓடை தோண்டப்பட்டு விரிவுபடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூறி கடந்த காலங்களில் ஜனாதிபதி, கடற்றொழில் அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என கடற்றொழிலாளர் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் தற்போது கடற்றொழிலாளர் பல்வேறு துன்ப துயரங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். காலையில் இருந்து சுமார் 6 மணித்தியாலங்களின் பின்னர் குறித்த ஓடைக்கு நீர் வரும். அது வரை காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பொருளாதார ரீதியில் பாதிப்பு
தற்போதைய கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தற்போது குறித்த ஓடையில் நீர் வற்றிய நிலையில் காணப்படுவதனால் படகுகளை கடலுக்குள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, இதனால் நீண்ட நாட்களாக கடற்றொழிலாளர் தொழிலுக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.
இதனால் பள்ளி முனையில் உள்ள கடற்றொழிலாளர் குடும்பங்கள் தற்போது பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர். இதேவேளை பள்ளிமுனை கடற்றொழிலாளர் ஒவ்வொரு வருடமும் இந்த காலப்பகுதியில் சுமார் 4 மாதங்கள் கடற்றொழில் செய்ய முடியாத நிலையில் உள்ளதாக பள்ளிமுனை பங்குத்தந்தை தெரிவித்தார்.
எனவே கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உரிய தரப்பினர் குறித்த ஓடையை தோண்டி விரிவுபடுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




