மன்னாரில் விபத்து : சாரதிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
புதிய இணைப்பு
மன்னார்-பள்ளமடு பெரியமடு பிரதான வீதியில் நேற்று (22) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் கனரக வாகனத்தை செலுத்திச் சென்ற சாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று அதிகாலை பெரிய மடு பிரதான வீதியூடாக பயணித்த கனரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளாகிய நிலையில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது பெரியமடு பகுதியைச் சேர்ந்த கே.சத்திய பிரபாகரன் (வயது-31) சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு,சாரதி உள்ளடங்களாக மூவர் காயமடைந்தனர்.
விளக்கமறியல்
இந்த நிலையில் குறித்த கனரக வாகனத்தின் சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது அவர் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டார்.
மேலும் காயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரு சகோதரர்களில் ஒருவர் வீடு திரும்பியுள்ளார்.
முதலாம் இணைப்பு
மன்னார் - பள்ளமடு பெரியமடு பிரதான வீதியில் இன்று(22) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
பெரிய மடு பிரதான வீதியூடாக பயணித்த டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதன் காரணமாக இந்த விபத்து சம்பவித்துள்ளது.
சம்பவ இடத்திலேயே மரணம்
குறித்த டிப்பர் வாகனத்தில் 4 நபர்கள் பயணித்துள்ளதாகவும், விபத்தின்போது ஈச்சளவக்கை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, சாரதி உள்ளடங்களாக மூவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த மூவரும் உடனடியாக மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






