அரசியல் பிழைப்புக்காக மோசமான வேலைகளை செய்யும் மானிப்பாய் தவிசாளர் : உறுப்பினர் அச்சுதபாயன் குற்றச்சாட்டு
மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் க.ஜெசீதன், குடும்பப் பெண் ஒருவரை அவமானப்படுத்தியுள்ளதுடன் அவரை வற்புறுத்தி அழைத்துச் சென்று ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தியுள்ளதாக, மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர் அச்சுதபாயன் குற்றம் சுமத்தியுள்ளார்.
நேற்றையதினம்(15.06.2026) யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மறுக்கப்பட்ட அனுமதி
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மானிப்பாய் பிரதேச சபைக்கு உட்பட்ட காடாப்புலம் பிரதேச சபை காணியில் உள்ள இரும்பு கதவானது திருட்டு போன நிலையில் ஊடகவியலாளர் அது குறித்து செய்தி சேகரிப்புக்குச் சென்றவேளை அவருக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், அவர் அந்த காணியில் எத்தனை பேர் கடமையில் இருப்பதாக பிரதேச சபையிடம் வினவியபோது அங்கு ஒருவர் மட்டும் கடமையில் இருப்பதாக பிரதேச சபையினாரல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு அந்த ஊடகவியலாளர் குறித்த காணியில் ஒரு பெண் உட்பட இருவர் இருப்பதாக பிரதேச சபை தரப்பினருக்கு தகவல் வழங்கியுள்ளதுடன் ஆளுநரின் செயலாளருக்கும் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர், ஏறக்குறைய 45 நிமிடங்கள் அந்த காணிக்கு அண்மித்த பகுதியில் நின்றுள்ளார். அவ்வளவு நேரம் நின்றும் காணியில் இருந்து யாரும் வெளியேறவில்லை.
அங்கு இருந்த பெண், அங்கு இருந்த காவலாளியின் மனைவி என்றும், அவர் கணவனுக்கு சாப்பாடு கொடுப்பதற்காக வந்தார் என்றும் தவிசாளர் கூறுகிறார்.
செய்தியில் பிரசுரிக்கப்பட்ட பெண்ணின் படம்
சாப்பாடு கொடுப்பதற்காக வந்த பெண் எதற்காக ஏறக்குறைய 45 நிமிடங்கள் அங்கு நிற்க வேண்டும்? அந்தப் பெண் காணியின் வாயிலில் வைத்து தானே சாப்பாடு வழங்க வேண்டும். எதற்காக காணியின் உட்பகுதிக்குள் சென்றார்?
குறித்த காணிக்குள் செல்வதற்கு அந்த பெண்ணுக்கு பண்டத்தரிப்பு உப பிரதேச செயலக பொறுப்பதிகாரி அனுமதி வழங்கியதாக தவிசாளர் கூறுகிறார்.

முதல் நாள் அந்த பெண்ணின் கணவர் கடமையில் இருந்தபோதே கதவு களவு போனது. இவ்வாறான சூழ்நிலையில் எதற்காக அந்த பெண்ணை அடுத்த நாள் உள்ளே அனுமதிக்க வேண்டும்?
அந்த பெண்ணின் படத்தினை ஊடகவியலாளர் செய்தியில் பிரசுரித்ததாக கூறி அவர்களையும் அழைத்துச் சென்று மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் யாழ். ஊடக அமையத்தில் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பை செய்துள்ளார்.
இதன்போது, இந்தப் பெண்ணை அந்த ஊடகவியலாளர் அவமரியாதைக்கு உட்படுத்தியதாக தவிசாளர் ஊடக சந்திப்பில் கூறுயுள்ளார். அந்த பெண் நீண்ட தூரத்தில் இருக்கும் போது, அதுவும் பின் பக்கமாக எடுத்த படத்தையே அந்த ஊடகவியலாளர் செய்தியில் பதிவிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பு
அந்த படத்தில் இருப்பவர் யார் என்று யாருக்கும் அடையாளம் காணவே முடியாத நிலையில் அந்த படம் காணப்படுகிறது. அத்துடன் அந்த ஊடகவியலாளருக்கு அது யாருடைய மனைவி? அவர் யார் என்று கூட தெரியாது.
உள்ளே மேலதிகமாக ஆட்கள் இருப்பதை உறுதிப்படுத்தவே அவர் அந்த செய்தியில் படத்தை பிரசுரித்துள்ளார். ஆனால் தவிசாளர் உள்ளிட்ட குழுவினர் அவரை அழைத்து சென்று ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தி அந்த பெண்ணை உலகத்துக்கு அம்பலப்படுத்தியுள்ளார்.
யார் என்றே அடையாளம் காண முடியாதவாறு அந்த பெண்ணின் பின்புற படத்தினை பகிர்ந்து ஊடகவியலாளர் அந்த பெண்ணை அவமானப்படுத்தினார் என்றால், அவரது முகத்தினை காட்டி ஊடக சந்திப்பினை ஏற்பாடு செய்த தவிசாளரை என்ன சொல்வது?

தவிசாளர்தான் அந்த பெண்ணின் முகத்தினை வெளிக்காட்டி அவமானப்படுத்தியுள்ளார். அந்த ஊடக சந்திப்பை பார்க்கும்போது தவிசாளர் அவர்களை வற்புறுத்தி ஊடக சந்திப்புக்கு அழைத்து வந்தது தெளிவாக தெரிகிறது.
அவர்கள் கருத்து தெரிவிக்கும்போது மிகவும் பயந்து கருத்து தெரிவிக்கிறார்கள். அதில் உள்ள பணியாளரது வேலைக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் தவிசாளர் அவர்களை பாதுகாக்கப்போவது இல்லை.
ஊடகவியலாளர்களை பழிவாங்கும் செயல்
கஷ்டப்பட்ட குடும்பப் பெண்ணின் படத்தினை செய்தியில் பிரசுரித்தாக தவிசாளர் மிகவும் கரிசனையாக கூறுகின்றார். ஊடகங்கள் வாயிலாக சுட்டிக் காட்டப்படும் தவறுகளை திருத்தாமல் தவறுகளை சுட்டிக் காட்டுகின்ற ஊடகவியலாளர்களை பழிவாங்கும் செயற்பாட்டில் தவிசாளர் ஈடுபடுகின்றார்.
அந்த ஊடகவியலாளர் பிரதேச சபையின் கருத்துக்களை கேட்காமல் செய்திகளை பிரசுரிப்பதாக தவிசாளர் குற்றம் சாட்டுகிறார். ஆனால் அது உண்மை இல்லை.

அந்த ஊடகவியலாளர் பிரதேச சபையினரை தொடர்பு கொண்டு அவர்களது தரப்பு கருத்துக்களை கேட்கும்போது அவர்கள் அதற்கு பதிலளிப்பதில்லை. எனவே அந்த ஊடகவியலாளர் பிரதேச சபையினர் பதிலளிக்கவில்லை என்று பல இடங்களில் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தவிசாளர் தனிப்பட்ட பழிவாங்கலை நிறுத்திவிட்டு சுட்டி காட்டுகின்ற தவறுகளை திருத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.