மானிப்பாயில் சபாநாயகர் கலந்து கொண்ட நிகழ்வில் புறக்கணிக்கப்பட்ட தவிசாளர்!
மானிப்பாயில் சபாநாயகர் கலந்துகொண்ட நிகழ்வில் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் ஜசீதன் புறக்கணிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இன்றையதினம்(19) முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் துறவற நூற்றாண்டு விழா நிகழ்வானது மானிப்பாய் இந்துக் கல்லூரியில், சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமானது.
இந்த நிகழ்வில் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் ஜசீதன் புறக்கணிக்கப்பட்ட நிலையில் அவரும், உறுப்பினர்களும் அவ்விடத்தை விட்டு வெளியேறினர்.
புறக்கணிக்கப்பட்ட தவிசாளர்
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் பேரணியாக அழைத்து வரப்பட்டனர்.
அதன்பின்னர் சுவாமி விவேகானந்தரின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
சபாநாயகர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் என பலருக்கும் நிகழ்வில் முன்னுரிமை வழங்கப்பட்ட நிலையில் குறித்த பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தவிசாளருக்கு எந்தவிதமான முன்னுரிமைகளும் வழங்கப்படவில்லை.
விசனம்
அவர் ஒரு ஒரமாக அமர்ந்திருந்தார். பின்னர் மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர்கள் குழப்பமடைந்த நிலையில், தவிசாளரும் உறுப்பினர்களும் அவ்விடத்தை விட்டு வெளியேறினர்.
குறித்த நிகழ்வானது இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் ய.அனிருத்தகனால் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளருக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டு, அவர் நிகழ்வுக்கு வருகை தந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தவிசாளரை புறக்கணித்து நிகழ்வு நடாத்துவதற்கு பல்வேறு தரப்பினரும் விசனத்தை வெளியிடுகின்றனர்.
துறவற நூற்றாண்டு விழா
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழா இன்று மானிப்பாய் இந்துக்கல்லூரியில் இடம்பெற்றது.
புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், யாழ்ப்பாண மாவட்ட செயலகம், யாழ்ப்பாண பிரதேச செயலகம் , அகில இலங்கை இந்துமாமன்றம், யாழ்ப்பாண தமிழச்சங்கம், மானிப்பாய் இந்துக்கல்லூரி ஆகியன இணைந்து இந்த துறவற நூற்றாண்டு விழாவினை ஏற்பாடு செய்திருந்தன.
இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக கௌரவ சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன கலந்துகொண்டதுடன் வடமாகாண ஆளுனர் நாகலிம்கம் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், வைத்தியரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.ஸ்ரீபவானந்தராஜா, யாழ். மாவட்ட அரச அதிபர் ம.பிரதீபன், பிரதேச செயலர்கள்,செந்தமிழ் சொல்லருவி ச.லலீசன் ,ஆசரியர்கள் மாணவர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்திலிருந்து பண்பாட்டு ஊர்வலத்துடனும் தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பாட்டத்துடனும் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டனர்.
இதன்போது சுவாமி விபுலானந்தரின் உருவப்படங்கள் தாங்கிவரப்பட்டதுடன் சுவாமியின் வேடம் தாங்கி மாணவர்களின் ஊர்திப்பவனியும் இடம்பெற்றது.
விபுலானந்தரின் துறவற நூற்றாண்டை முன்னிட்டு நினைவு முத்திரையும் தபால் திணைக்களத்தால் வெளியிடப்பட்டது.
விபுலானந்த அடிகள் என்கின்ற நூலும் வெளியிடப்பட்டதுடன் நினைவுப் பரிசும் விருந்தினர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
கலை கலாச்சார நிகழ்வுகள் விழாவினை அலங்கரித்தன. "வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது" எனும் பாடலை இயற்றிய சுவாமியவர்கள் 19 ஆம் திகதி யூலை மாதம் 1947 இல் தனது 55 ஆவது வயதில் இறையடி சேர்ந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |












யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 18 மணி நேரம் முன்

மகனையே கொடூரமாக மிரட்டும் ஆதி குணசேகரன், பெண்கள் திட்டம் நடக்குமா! எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
