நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து சடலங்கள் மீட்பு
திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திரியாய் 05ம் வட்டாரத்தில் ஆணொருவனின் சடலமொன்று இன்று (08) மீட்கப்பட்டுள்ளது.
சடலம் யாருடையது என்பது பற்றி இன்னும் இனம் காணப்படவில்லை எனவும் சடலம் இனம் காண முடியாத நிலையில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழப்புக்கான காரணம்
குறித்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் நாளைய தினம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், யாழ்ப்பாண நகரப் பகுதியில் உள்ள புல்லுகுளத்தில் சடலமொன்று இன்று(08) மாலை இனங்காணப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்திற்கு அருகில் உள்ள குறித்த குளத்தில் சடலமொன்று மிதப்பதாக பொலிஸாருக்கு தகவலளிக்கப்பட்டது.
உயிரிழந்தவர் பற்றியோ உயிரிழப்புக்கான காரணமோ தெரியவராத நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முறைப்பாடு செய்யப்பட்ட பின்னர்
மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கத்தில் இருந்து இன்று(08) மாலை ஆண் ஒருவரின் சடலம், கடற்படை சுழியோடிகளால் மீட்கப்பட்டது.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவுன்லோ பகுதியைச் சேர்ந்த வேலு மருதமுத்து (வயது 55) நேற்றுமுன்தினம் புதன்கிழமை காலை முதல் காணாமல்போயிருந்தார்.
இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட பின்னர் தேடுதல் வேட்டை ஆரம்பமானது.
இந்நிலையிலேயே இன்று அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



