பாரவூர்தியை உடைத்து இலத்திரனியல் உபகரணங்களை திருடிய ஒருவர் கைது (Photos)
யாழ்.கோண்டாவில் பகுதியில் களஞ்சிய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியை உடைத்து சுமார் 11 லட்சம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களைத் திருடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தலைமறைவாகியுள்ள மற்றொருவரை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருடிய இலத்திரனியல் பொருள்களை இன்று விற்பனை செய்த போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
திருநெல்வேலியில் அமைந்துள்ள இலத்திரனில் பொருள்கள் விற்பனை நிலையத்தின் களஞ்சியம் கோண்டாவிலில் உள்ளது. கடந்த மாதம் வர்த்தக நிலையத்துக்கு எடுத்து வருவதற்காக பாரவூர்தியில் பொருள்கள் ஏற்றப்பட்ட நிலையில், டீசல் இல்லாமை காரணமாகத் தரித்து விடப்பட்டிருந்தது.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
அதன்போதே இரவு வேளை பாரவூர்தி உடைக்கப்பட்டு சுமார் 11 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருள்கள் திருடப்பட்டன. சம்பவம் தொடர்பில் வர்த்தகரினால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதுதொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், கோப்பாய் பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கோண்டாவிலைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடைய இருவரே இந்த திருட்டை மேற்கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவர் தலைமறைவாகியுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக 4 வழக்குகளில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



