புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் இயந்திரங்களில் ஏற்பட்டுள்ள கோளாறு
காலி-கராபிட்டிய மற்றும் மஹரகம அபேக்ஷா மருத்துவமனைகளில் புற்றுநோயாளிகளுக்கான சிகிச்சை வழங்கும் லீனியர் ஆக்சிலேட்டர் இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சானக்க தர்மவிக்ரம இன்று வியாழக்கிழமை (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கணினி இணைப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், காலி கராபிட்டிய தேசிய வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் உள்ள ஒரே ஒரு லீனியர் ஆக்சிலேட்டர் இயந்திரத்துக்கான கணினி இணைப்பு செயலிழந்து இரு வாரங்கள் கடந்துள்ளன.
இந்நிலையில் புற்றுநோய் சிகிச்சைக்காக பெயரிடப்பட்டுள்ள புதிய நோயாளர்களுக்கான சிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கதிரியல் சிகிச்சைகளை திட்டமிடும் கணினி இணைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இவ்வாறு சிகிச்சைகள் தடைப்பட்டுள்ளன. இது தொடர்பில் உரிய தரப்பினருக்கு தெரிவித்துள்ள போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.
நோய்களுக்கான சிகிச்சைகள்
லீனியர் ஆக்சிலேட்டர் இயந்திரத்தில் எவ்வித குறைபாடுகளும் ஏற்படவில்லை ஆகையால், ஏற்கனவே கணினி அமைப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நோய்களுக்கான சிகிச்சைகள் மாத்திரமே வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் காலி வைத்தியசாலையில் இதுவரை கதிர்வீச்சு சிகிச்சைக்காக சுமார் 4 மாதங்களுக்கான நோயாளர்களின் பெயர் பட்டியலிடப்பட்டுள்ளது.
இதேவேளை மஹரகம தேசிய புற்றுநோய் வைத்தியசாலையில் செயலிழந்துள்ள இரு இயந்திரங்களுக்கான பழுதுபார்க்கும் நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.