இலங்கைக்காக சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுக்கும் மாலைத்தீவு ஜனாதிபதி
அண்மையில் இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டிருந்த மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் சோலிஹ் ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில், போது, இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய இரு நாடுகளுக்கும் உலகளாவிய நிதி ஆதாரங்களை மேலும் அணுகுவது அவசியமானது என்றும், இலங்கை, மாலைதீவு போன்ற நாடுகளுக்கு சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக உதவிகளை வழங்க வேண்டுமென தாம் கோரிக்கை விடுப்பதாக மாலைத்தீவு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அவ் நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
மாலைத்தீவு முழுமையாக சுற்றுலாத்துறை சார் பொருளாதாரக் கட்டமைப்பினைக் கொண்டது எனவும் வைரஸ் தாக்கத்திற்கு முன்பிருந்த நிலையில் 70 வீதம் மீண்டும் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருப்பதாகவும், இலங்கை மற்றும் மாலைதீவு போன்ற நாடுகளுக்கு பொருளாதார ரீதியாக மீட்சி அடைவதற்கு சர்வதேச நிதி வளங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகள் இருக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதாகவும் நாடு பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் இந் நிலையில் இலங்கையுடன் அர்த்தபூர்வமான அடிப்படையிலான தொடர்புகளை மாலைத்தீவு தொடர்ச்சியாக பேணும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்டை நாடுகள் மற்றும் சர்வதேச பங்குதாரர்களுடன் புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கும், பாதுகாப்பினை உறுதி செய்து கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, மாலைத்தீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிர்வாகத்துடன் மாலைத்தீவு தொடர்ந்து அர்த்தமுள்ள வகையில் ஈடுபடும் என்றும் மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் சோலிஹ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மாலைத்தீவு இலங்கை மற்றும் இந்தியாவுடன் முத்தரப்பு உடன்படிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த முத்தரப்பு ஒப்பந்தத்தின் மூலம் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், கடற்கொள்ளையர்களுக்கு எதிரான முயற்சிகள் மற்றும் கண்காணிப்பு போன்றவற்றில் ஒத்துழைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.