மோடியை தந்திரமாக 16 முறை தவிர்த்த மைத்திரி: காரணம் என்ன? காலம் கடந்து வெளியான தகவல்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன( Maithripala Sirisena ), ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் 16 முறை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ( Narendra Modi ) சந்திப்பதை தவிர்த்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் மற்றும் திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மேற்கொண்ட முயற்சியை முறியடிப்பதற்காக அவர் இவ்வாறு நடந்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் மற்றும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் ஆகியவற்றை இந்திய நிறுவனங்களுக்கு பெற்றுக்கொள்வதற்காக இந்தியப் பிரதமர் தனிப்பட்ட ரீதியில் தலையீடுகளை மேற்கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இது சம்பந்தமாக அன்றைய ஜனதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இந்தியப் பிரதமர் நேரடியாக நடத்த முயற்சித்த அனைத்து பேச்சுவார்த்தைகளையும் மைத்திரிபால சிறிசேன, தந்திரமான முறையில் தவிர்த்துக்கொண்டதாக தெரியவருகிறது.
குறிப்பாக மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்திலேயே திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பாக இந்திய ஐ.ஓ.சி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், இலங்கை சட்டமா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.
அப்போது தகுதியான முதலீட்டாளர் ஒருவருக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் அதிகாரத்தை, அன்றைய பெட்ரோலியத்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவுக்கு (Arjuna Ranatunga) ஜனாதிபதி சிறிசேன தலைமையிலான அமைச்சரவை தீர்மானித்திருந்தது. எனினும் அது மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.