அநுரவின் அரசாங்கத்தில் மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை பெறுவார்! நாமல்
அநுர குமார தலைமையிலான அரசாங்கத்தின் பதவிக் காலத்திற்குள்ளாகவே மகிந்த ராஜபக்ச அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை பெறுவார் என்று நாமல் ராஜபக்ச(Namal Rajapaksha) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச குடும்பம்
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
இந்த அரசாங்கம் பதவிக்கு வருவதற்காக பல்வேறு பொய்களையும், வாக்குறுதிகளையும் அள்ளி வீசியது. எங்கள் மீதும் ராஜபக்ச குடும்பத்தின் மீதும் சேற்றை வாரி இறைத்தார்கள்.
ஆனால் இதே அநுர குமார அரசாங்கத்தின் பதவிக் காலத்துக்குள்ளாகவே மகிந்த ராஜபக்ச அனைத்துக் குற்றச்சாட்டுகளிலும் இருந்து விடுதலை செய்யப்படுவார்.
அதனை நாங்கள் சாதிப்போம். நாங்கள் மக்களுக்காக அரசியல் செய்தவர்கள். மக்கள் நலன் சார்ந்து செயற்பாடுகளை மேற்கொண்டவர்கள். இப்போதைக்கு எங்கள் கட்சி புதுப்பிக்கப்பட்டுள்ளது.
அடுத்து வரும் தேர்தல்
எதிர்வரும் காலங்களில் புதிய அரசியல் பாதையில் இந்தக் கட்சி பயணிக்கும். நாட்டு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும். அதன் மூலமாக அடுத்து வரும் தேர்தலில் நாங்கள் மீண்டும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சியை அதிகாரத்துக்குக் கொண்டுவருவோம்.
இந்தப் பயணத்தில் நாங்கள் மக்களுடன் கைகோர்த்துப் பயணிக்கவுள்ளோம்.
எந்த ஆதிக்க சக்திகளுக்கும் ஏன் அநுர குமாரவின் அரசாங்கத்துக்கும் அச்சப்பட மாட்டோம் என்றும் நாமல் ராஜபக்ச தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |