மகிந்தவைக் கைவிடாத பௌத்த அலை! உத்தியோகபூர்வ இல்லமொன்றை வழங்க பலரும் போட்டி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கொழும்பில் உத்தியோகபூர்வ இல்லமொன்றை வழங்க பல்வேறு தரப்பினரும் போட்டி போடத் தொடங்கியுள்ளனர்.
முதற்கட்டமாக அமெரிக்காவில் வசிக்கும் சிங்கள வர்த்தகப் பிரமுகர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்தின் மதிப்பீட்டு அறிக்கையின் பிரகாரம் வாடகையாக நிர்ணயிக்கப்பட்ட 45 லட்சம் ரூபா மாதாந்த வாடகை செலுத்தி விஜேராம இல்லத்தை மீண்டும் மகிந்தவுக்குப் பெற்றுக் கொடுக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீடு தேடும் படலம் தீவிரம்
அதே போன்று சீன அரசாங்கத்தின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கொழும்பில் வீடொன்றைப் பரிசளிக்கவும் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பௌத்த மதத்தின் மல்வத்து பீட துணைப்பிரிவான சீயம் நிகாயவின் கோட்டே பிரிவைச் சேர்ந்த பௌத்த தேரர்கள் குழுவொன்றும் மகிந்தவுக்காக வீடொன்றைக் கொள்வனவு செய்து வழங்குவதற்கு முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இலங்கையின் தலைசிறந்த வர்த்தகப் பிரமுகர்கள் சிலர் ஒன்றிணைந்து மகிந்தவுக்காக வீடொன்றை அன்பளிப்புச்செய்வது குறித்தும் நாமல் ராஜபக்சவுடன் கலந்துரையாடியுள்ளனர்.
எனினும் மகாசங்கத்தினர் வழங்கும் வீடொன்றைப் பெற்றுக் கொள்வதில் மகிந்த ராஜபக்ச நாட்டம் கொண்டிருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.
you may like this



