கப்பலின் வடிவில் இலங்கை முகம்கொடுக்கும் பாரிய பிரச்சினை! - சுமந்திரன்
எம். வி. எக்ஸ் பிரஸ் பேர்ல் கொள்கலன் கப்பலின் வடிவில் இலங்கை இன்று மேலும் ஒரு பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளது. கோவிட் நிலைமையினை முறையாக கையாள தவறி இன்று முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கு மேலாக எமது கடற் பரப்பில் கொழும்பு துறைமுகத்திற்கு அண்மையில் நச்சுதன்மை வாய்ந்த பதார்த்தங்களை கொண்ட இக் கொல்கலன் கப்பல் தீப்பற்றியது, பெருமளவில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலைமையானது முழுவதுமாக இலங்கை தானாக தேடிக்கொண்டதொரு பிரச்சினையே, ஏனெனில் கட்டார் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் இக் கப்பலில் காணப்படும் நச்சுத்தன்மை வாய்ந்த பதார்த்தங்கள் காரணமாக தமது எல்லைக்குள் அனுமதிக்காத நிலையில் இலங்கை அதிகாரிகள் இக்கப்பல் எமது கடற்பரப்பில் நுழைய அனுமதித்துள்ளனர்.
இவர்கள் இதில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் தொடர்பாக அறிந்திருக்கவில்லைய அல்லது அறியாமல் அனுமதித்திருக்க முடியுமா? எதற்காக அது எமது எல்லைக்குள் வந்தது? எங்கு நோக்கி பயணித்தது? மற்றும் அந்த நச்சு பதார்த்தங்களின் பயன்பாடு என்ன? போன்ற கேள்விகள் எழுகின்றன. இவற்றிற்கு பதிலளிக்காது இலங்கை தப்பிக்க முடியாது.
இதனை அரசியல் பிரச்சினையாக ஆக்க வேண்டாம் என்று ஜனாதிபதி கூறுகிறார் ஆனால் இது ஒரு அரசியல் பிரச்சினையே, இவ்வரசாங்கத்தின் இயலாத தன்மையினையே இது வெளிப்படுத்துகிறது, மேலும் சரியான முறையில் விசாரணைகளை முன்னெடுக்கும் பட்சத்தில் இன்னும் பல காரணங்களை அறியக்கூடியதாக இருக்கும். துறைமுக மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் மௌனமாக இருக்கின்றார்.
நீர்வள அமைச்சர் இதன் மூலம் நாம் பெரும் இழப்பீட்டின் மூலம் பயனடைவோம் என தெரிவித்துள்ளார். அரசாங்கம் இக்கப்பலின் எச்சங்களை ஆழ்கடல் நோக்கி கொண்டு செல்ல முனைந்தது இதுவும் சர்வதேச நீர் எல்லைகள் தொடர்பான சட்டங்களுக்கு நாம் கட்டுப்பட்டவர்களாகவும் பொறுப்புகூற வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம். மேலும், எமக்கு கடல் மாசு தொடர்பான எமது நாட்டின் சட்ட திட்டங்களும் காணப்படுகின்றன. இத் தீ விபத்து மற்றும் அதனோடிணைந்த கடல் மாசு தொடர்பாக நாம் எவ்வாறான பொறுப்பினை உடையவர்களாக இருக்கின்றோம் என்பதனை நாம் அறிய வேண்டும்.
மேலும் மக்கள் ஏற்கனவே காணப்படும் பிரயாண தடை அல்லது ஊரடங்கின் காரணமாக பெருமளவு பொருளாதார சிக்கலுக்கு முகம் கொடுக்கும் இந்த காலகட்டத்தில், இவ்விபத்து மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல முடியாத நிலையினையும் மக்கள் மீனை உணவுக்கு உபயோகிக்க அச்சம் கொள்ளும் நிலையினையும் கடல்வளம் பெருமளவில் பாதிக்கப்பட்டு பாரதூரமான அழிவுக்கு இட்டுச் செல்லும் நிலைமையில் இலங்கையின் பிரஜைகளுக்கு பதில் கூற கடமைப்பட்டுள்ள அரசு மௌனமாக இருக்கின்றது.