புலிகளின் குரல் வானொலியின் அறிவிப்பாளர் மரணம்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் 'புலிகளின் குரல்' வானொலியின் பிரபல அறிவிப்பாளராகச் செயற்பட்ட சத்தியா (சிவசுப்பிரமணியம் ஞானகரன்) மாரடைப்பால் காலமானார்.
1990 ஆம் ஆண்டில் புலிகளின் வானொலி தொடங்கி முதலாவது செய்தி ஒலிபரப்பாகியபோது “புலிகளின்குரல் - செய்திகள் வாசிப்பவர் சத்தியா” என்று செய்தி வாசித்தவர் அவர், புலிகளின் குரல் வானொலியில் செய்தி ஆசிரியராகவும், செய்தி வாசிப்பாளராகவும் 2003 ஆம் ஆண்டு வரையில் அவர் செயற்பட்டிருந்தார்.
செய்தி வாசிப்புப் பாணி
அவருடைய செய்தி வாசிப்புப் பாணியை வைத்து செய்தியின் கனதி தொடர்பில் மக்கள் உணரக்கூடிய அளவுக்கு அவருடைய அறிவிப்பு தனித்துவம் பெற்றிருந்தது.
நிதர்சனம் நிறுவனத்தில் மாதாந்தம் வெளியாகிய ஒளிவீச்சு காணொளிச் சஞ்சிகையில் தொடர்ந்து மாதாந்தம் இடம்பெற்ற “சமகாலப் பார்வை” என்ற நிகழ்ச்சிக்கான குரல் வழங்குபவராக நீண்டகாலமாக அவர் செயற்பட்டார்.
நிதர்சனம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் நேர்காணலுடன் ஒளிபரப்பாகிய “விடுதலைத் தீப்பொறி” என்கின்ற நிகழ்ச்சியின் குரல் வழங்குநராகவும் அவர் செயற்பட்டார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் 50 ஆவது பிறந்தநாளையொட்டி நிதர்சனம் நிறுவனம் தயாரித்த “தலைநிமிர்வு 50” என்ற ஆவணப்படம் உட்பட்ட ஏராளமான ஆவண வெளியீடுகளின் பிரதான குரல் தொகுப்பாளராகவும் அவர் புகழ் பெற்றிருந்தார்.
இடப்பெயர்வுக்கு முன்னர், நிதர்சனம் நிறுவனத்தினரை யாழ்ப்பாணத்தில் இரண்டு சந்தர்ப்பங்களிலும் பின்னர் முள்ளியவளையில் புலிகளின் குரல் வானொலி செயற்பட்ட 1998 ஆம் ஆண்டு காலப் பகுதியிலும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரால் அவர் மதிப்பளிப்பளிக்கப்பட்டார்.
புலிகளின் குரல் வானொலியில் ஒலிபரப்பாகிய வரலாற்றுத் தொடரான “காலச்சக்கரம்” என்ற நிகழ்ச்சியை எழுதித் தயாரித்து, மறைந்த கலைஞர் சங்கநாதனுடன் இணைந்து சத்தியா குரல் வழங்கியிருந்தார்.
இறுதிக்கிரியை நிகழ்வு
விவசாயம் சார்ந்த கருப்பொருளை உள்ளடக்கிய “மண்முற்றம்” என்ற நிகழ்ச்சியை எழுதித் தயாரித்து அதில் அவர் குரல் வழங்கியும் இருந்தார்.
மக்களின் குரலாக ஒலித்த “ஊர் சுற்றும் ஒலிவாங்கி” என்ற நேர்காணல் நிகழ்ச்சியைப் புலிகளின் குரல் வானொலியில் அவர் தயாரித்திருந்தார்.
2003 ஆண்டிலிருந்து ஊடகத்துறையிலிருந்து ஒதுங்கிய அவர் பகுதி நேர ஆங்கில ஆசிரியராகவும் பின்னர் ஆசிரியராகவும் செயற்பட்டு வந்திருந்தார்.
அண்மையில் விபத்து ஒன்றில் சிக்கிக் காயமடைந்த அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார்.
இந்நிலையில் மாரடைப்பால் நேற்று அவர் காலமானார்.
அவரின் இறுதிக்கிரியை நிகழ்வு கிளிநொச்சி, வட்டக்கச்சியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |