திருச்சி சிறப்பு முகாமில் ஈழத்தமிழர்கள் உண்ணாவிரதம்! உயிரைக் காக்க தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை
சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளைக் கேட்டறிய அமைச்சர்கள் கே. தென்னரசு மற்றும் வன்னி அரசு ஆகியோரை முகாமுக்கு அனுப்பவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர்களின் உயிரைக் காக்க முதலமைச்சர் விஜய்க்கு ஈழ அகதிகள் பாதுகாப்பு குழு கோரிக்கை வைத்துள்ளது.
ஈழ அகதிகள்
ஈழ அகதிகள் பாதுகாப்புக்குழு சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் பா. புகழேந்தி, நேற்று(23) சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தமிழக முதலமைச்சர் தனிப் பிரிவில் மனு ஒன்றை வழங்கினார்.

அந்த மனுவில், "திருச்சி இலங்கைத் தமிழர் சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர் மீதான வழக்குகளை விரைந்து முடித்து, சொந்த நாடான இலங்கைக்கு அனுப்பக் கோரி 5 ஈழத்தமிழர்கள் 9 நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களின் உயிரைக் காப்பாற்றி, கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள சுகந்தினி, பரிஷ்டா, ஜனனி, ஜான்சன், மதுசன் ஆகியோர் தங்கள் மீதான வழக்குகளை விரைந்து முடித்து, இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையுடன் கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர்
சுகந்தினி மீது திருச்சி க்யூ பிரிவு பொலிஸார் பதிவு செய்துள்ள வழக்கில் (Cr.No.1/2023), இரண்டரை ஆண்டுகளாகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.
பரிஷ்டா தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை 13 ஆம் திகதியிலேயே ரத்து செய்து, அவரை சிறப்பு முகாமிலிருந்து விடுவிக்க உத்தரவிட்டுவிட்டது. இருப்பினும், இதுவரை அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதுபோல ஈழத் தமிழர்கள் பலரின் வழக்குகள் முடிக்கப்படாமல் உள்ளன.

அவற்றை விரைந்து முடிக்க வேண்டும்" என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, "சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளைக் கேட்டறிய அயலக வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் கே. தென்னரசு மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆகியோரை முகாமுக்கு அனுப்ப வேண்டும்.
மேலும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து, சட்டரீதியான தடைகள் இல்லாதவர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கோ அல்லது தேவையான இடங்களில் வழக்குகளை மீள பெறுவதற்கோ தமிழ்நாடு அரசு மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ஈழ அகதிகள் பாதுகாப்புக்குழு தமிழ்நாடு முதலமைச்சர் தனி பிரிவில் கோரிக்கை வைத்துள்ளது.
உக்கிரமடையும் ஈரான் போர்... இக்கட்டான நேரத்தில் கைவிரித்த ரஷ்யா: இந்தியாவிற்கு புது சிக்கல் News Lankasri
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam