புலம்பெயர் தமிழர்களுடனான அநுர அரசாங்கத்தின் நகர்வு! விடுதலைப் புலிகளை காரணம் காட்டும் ஹர்ஷன
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி புலம்பெயர்ந்து வாழும் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தமிழ் சமூகத்தை மகிழ்விக்கும் அநுர
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்திக்கு புலம்பெயர் விடுதலைப் புலிகளுடன் தொடர்பிருக்கிறது. அதனால் தான் இராணுவ வீரர்களை, வீரர்கள் என அழைப்பதில் கூட பின்வாங்குகின்றனர்.
இதன் காரணமாகவே அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு சார்பாகவும் பேசுகின்றனர். இதன் மூலம் குறிப்பிட்டவொரு தமிழ் சமூகத்தை மகிழ்விப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.
இந்த அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்திலும் இராணுவத்தினருக்காக நிற்கப் போவதில்லை. மாறாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவே செயற்படும்.
பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் ஸ்திரமாகவுள்ளோம். அதனை இந்த அரசாங்கம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறது என்பதையும் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் எதிர்க்கட்சியாக இருந்த போது ஒரு நிலைப்பாட்டையும், ஆட்சிக்கு வந்த பின்னர் வேறு நிலைப்பாட்டையும் அரசாங்கம் பின்பற்றுகிறது. அரசாங்கத்தின் இந்த இரட்டை கொள்கை வெட்கப்பட வேண்டியதாகும் என குறிப்பிட்டுள்ளார்.
