வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்திற்கு சட்டதரணிகள் குழு விஜயம்(Video)
வவுனியா-வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்திற்கு சட்டத்தரணிகள் குழு இன்று (30.04.2023) விஜயம் செய்தனர்.
வவுனியா வடக்கு, ஓலுமடு ஆதி சிவன் ஆலயத்தில் உடைக்கப்பட்ட விக்கிரகங்களை மீள பிரதிஷ்டை செய்ய வவுனியா நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை அனுமதி வழங்கியிருந்தது.
இதனையடுத்து வெள்ளிக்கிழமை(28.04.2023) ஆலயத்தில் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், விக்கிரங்கள் வைப்பு செய்யப்பட்டமை மற்றும் ஆலயத்தின் தற்போதைய நிலமை தொடர்பில் பார்வையிடுவதற்காக குறித்த வழக்கில் ஆலயம் சார்பிலும், பாதிக்கப்பட்ட தரப்புக்கள் சார்பிலும் மன்றில் முன்னிலையாகி வாதப் பிரதி வாதங்களை முன்வைத்த சட்டத்தரணிகள் குழு விஜயம் செய்திருந்தனர்.
இதில், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், வவுனியாவின் சிரேஸ்ட சட்டத்தரணி தி.திருஅருள், சட்டத்தரணிகளான திலீப் காந்தன், கீர்த்தனன், இளஞ்செழியன், திபின்சன் உள்ளிட்ட சட்டரத்தரணி குழுவினர் சென்றிருந்தனர். இவர்களுடன் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான சீ.வீ.கே.சிவஞானம், ஜி.ரி.லிங்கநாதன், சுகிர்தன், கேசவன் சயந்தன், ரவிகரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி-திலீபன்
சுமந்திரனின் கருத்து
நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் வெடுக்குநாறி மலைக்கு பொதுமக்கள் சுதந்திரமாக வந்து செல்ல வேண்டும் அதனை மதித்து அரச உத்தியோகத்தர்கள் செயற்படவேண்டும் என நாடாமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வெடுக்குநாறி மலைக்கு இன்றைய தினம் (30.04.2023) சனிக்கிழமை விஜயம் செய்த அவர் ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தினை பார்வையிட்டார்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
விக்கிரகங்கள் மீளவும் பிரதிஷ்டை
வெடுக்குநாறிமலையில் விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றது.
இந்த ஆலயம் தொடர்பாக நீதிமன்றில் இரு கட்டளைகள் வழங்கப்பட்டதற்கு இணங்க அந்த விக்கிரகங்கள் மீளவும் பிரதிஷ்டை செய்யும் செயற்பாடு இடம்பெற்றிருக்கின்றது.
குறித்த விடயம் தொடர்பான வழக்கு எதிர்வரும் 17ஆம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
எனவே நீதிமன்றில் தவறான கருத்துக்கள் எதும் சொல்லப்பட்டால் அதற்கு பதில் அளிக்கும் விதமாக இன்றைய தினம் நேரிலே ஆலயத்திற்கு சென்று விடயங்களை அவதானித்துள்ளோம். இது ஒரு மகிழ்ச்சியான விடயம்.
பொதுமக்கள் சுதந்திரமாக வந்து செல்ல வேண்டும்
இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை ஆலயத்திற்கு வருகைதந்த பக்தர்களின் அடையாள அட்டைகள் பதிவுசெய்யப்பட்டமை தேவையற்ற ஒரு விடயம்.
இன்றையதினம் அவ்வாறான நடவடிக்கை இடம்பெறவில்லை. பொதுமக்கள் சுதந்திரமாக வந்துசெல்வதற்கு இடமளிக்கவேண்டும் என்பதே நீதிமன்றின் கட்டளையாக இருக்கின்றது.
அதனை மதித்து அனைத்து அரச உத்தியோகதர்களும் செயற்ப்படவேண்டும். செயற்படுவார்கள் என்று நாம் எதிர்பார்க்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.