இலங்கையில் கடவுச்சீட்டு பெற நீண்ட வரிசை - காரணத்தை வெளிப்படுத்தியுள்ள தேரர்
திங்களன்று அதிபர், ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளிப்பார்களாயின் இனி எந்தவொரு ஆட்சியாளர்களிடம் இருந்தும் இதற்கான தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு எதிரான தேசிய ஒன்றிணைப்பின் ஒருங்கிணைப்பாளர் உலப்பனே சுமங்கல தேரர் (Ulapane Sumangala thero) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
21ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களின் போராட்டம் பாரிய வெற்றியடைந்துள்ளது. அதிபர், ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்காமையின் காரணமாக போராட்டங்களை தோல்வியடைய செய்வதற்கு அரசாங்கம் முன்னெடுத்த முயற்சி முற்றாக தோல்வியடைந்துள்ளது.
102 நாட்களுக்கும் அதிகமாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அதிபர், ஆசிரியர்களை மீண்டும் வீதிக்கு இறக்குவதற்காகவா அரசாங்கம் இவ்வாறு செயற்படுகிறது? அரசாங்கத்தின் இதுபோன்ற செயற்பாடுகள் மீண்டும் மீண்டும் அதிபர், ஆசிரியர்களை உதாசீனப்படுத்துவதாகும்.
இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களை காட்டிக் கொடுத்து திங்களன்று அதிபர், ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளித்தால் மீண்டுமொரு முறை எந்தவொரு ஆட்சியாளர்களிடமிருந்தும் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வைப் பெற்றுக் கொள்ளவே முடியாது.
பாடசாலைக்கு சமூகமளிக்காத அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்தை இடைநிறுத்தல் அல்லது அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தல் என்பன சட்ட ரீதியானதல்ல. அவ்வாறான தீர்மானங்களை எடுப்பதற்கு அரசாங்கத்திகு எவ்வித அதிகாரமும் கிடையாது.
எனவே எவ்வித தடையும் இன்றி எமது போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். அவற்றுக்கு முன்னிலையில் நின்று தலைமை வகிப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம்.
தமது தோல்வியை மறைப்பதற்காக வியாழனன்று சகல பாடசாலைகளும் திறக்கப்பட்டிருந்ததாகவும், ஆசிரியர்களும் மாணவர்களும் பாடசாலைக்கு சமூகமளித்திருந்ததாகவும் கல்வி அமைச்சரும் அமைச்சின் செயலாளரும் கூறுகின்றனர்.
ஆனால் எந்தவொரு பாடசாலையிலும் நுழைவாயில் கூட திறக்கப்பட்டிருக்கவில்லை என்பதே உண்மை நிலவரமாகும். கல்வி அறிவற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களுமே எமது போராட்டத்தை தவறாக விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர்.
கற்ற அறிவுடைய அமைச்சர்களுக்கு எமது கோரிக்கைகள் நியாயமானவை என்பது தெரியும். எனவே 25ஆம் திகதி நாம் பாடசாலைக்கு சமூகமளிக்கப் போவதில்லை.
அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் மாத்திரமே அன்றைய தினம் பாடசாலைகளுக்குச் செல்லும். இந்த போராட்டத்தின் ஒரு பாகமே குடிவரவு - குடியகழ்வு திணைக்களத்திற்கு முன்னாள் கடவுச்சீட்டினைப் பெற்றுக் கொள்வதற்காக காணப்படும் நீண்ட வரிசை ஆகும்.
உலகம் முன்னோக்கி சென்று கொண்டிருக்கும் போது மாணவர்களின் கல்வி உரிமை இல்லாமலாக்கப்பட்டுள்ளதால் இலங்கை பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இதனால் இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையே இந்த வரிசைக்கும் காரணமாகும் என குறிப்பிட்டுள்ளார்.