நுவரெலியாவில் இன்று முதல் மீள் அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஆறு கிராம சேவகர் பிரிவுகள்
நுவரெலியா மாவட்டம் கொத்மலை சுகாதார பிரிவிற்கு உட்பட்ட களுதுமெத கிராம சேவகர் பிரிவு, ஹபுகஸ்தலாவ கிராம சேவகர் பிரிவு, வீரபுர கிராம சேவகர் பிரிவு, பெரமான தெற்கு கிராம சேவகர் பிரிவு, டன்சினன் கிராம சேவகர் பிரிவு மற்றும் கொரகஓயா கீழ் பிரிவு கிராம சேவகர் பிரிவு ஆகியன இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
இந்த பகுதியில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு அமையவே இவ்வாறு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி இந்த கிராம சேவகர் பகுதிகளில் 168 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த பகுதிக்குள் உட் பிரவேசிக்கவும் அங்கிருந்து வெளிச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமுல்படுத்தப்படுள்ள தனிமைப்படுத்தலானது மீள் அறிவிக்கும் வரை அமுலில் இருக்கும் என கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அங்கு பலத்த பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை இப்பகுதியில் 100இற்கும் மேற்பட்ட குடும்பங்கள்
தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, இன்னும் சிலருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை
மேற்கொள்ள உள்ளதாகவும் கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம்
தெரிவித்துள்ளது.