தேர்தலை ஒத்திவைத்து ஜனநாயகத்தைச் சீர்குலைக்காதீர்! - அரசிடம் சஜித் வேண்டுகோள்
தேர்தலை ஒத்திவைத்து ஜனநாயகம் சீர்குலையும் அளவுக்குச் செயற்பட வேண்டாம் என்று அரசிடம் கேட்டுகொள்கின்றோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
எதிர்கட்சித் தலைவர் இன்று காலை வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து ஆசி பெற்றுக்கொண்டார்.
அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
ஜனநாயகத்தை சீர்குலைக்கும் அரசின் முயற்சி
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"இதற்கு முன்னர் தேர்தலை ஒத்திவைக்க அரசு 22 தடவைகளுக்கு மேல் முயற்சித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசின் ஒரே நோக்கம் தேர்தலை நடத்தாதிருப்பதே.
மக்களுக்குத் தங்களின் ஜனநாயக உரிமையான வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தச் சந்தர்ப்பம் கிடைக்காவிடின் ஜனநாயகம் சீர்குலைந்து போகும். ஜனநாயகத்தைச் சீர்குலைக்கவா அரசு முயற்சிக்கின்றது?" - என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
போராட்டங்களை அடக்குவதற்கு அரசு கண்ணீர்ப்புகைக் குண்டுளைப் பிரயோகிப்பது
தொடர்பில் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர், "நச்சுத் தன்மை
வாய்ந்ததாக இருந்தாலும், நச்சுத்தன்மையற்றதாக இருந்தாலும் மக்கள்
போராட்டத்தின் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசுவதற்கு அரசுக்கு எத்தகைய
உரிமையும் இல்லை" - என்றார்.




