நீதிமன்ற உதவியை நாடத் தயாராகும் தேர்தல் ஆணைக்குழு
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை கோரி நிதி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு இதுவரையில் உரிய பதில் கிடைக்கவில்லை என தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உரிய பதில் வழங்கப்படாவிட்டால் உயர் நீதிமன்றின் உதவியை நாட நேரிடும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
அரச அச்சகத் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், தபால் திணைக்களம் உள்ளிட்ட தேர்தல்களில் பங்களிப்பு செய்யும் நிறுவனங்களுக்கு முற்பணம் வழங்குமாறு கோரப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
ஆரம்ப கட்டச் செலவு
ஆரம்ப கட்டச் செலவாக 770 மில்லியன் ரூபா பணத்தை திரைசேரியின் செயலாளரிடம் கோரி இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கடந்த கால தேர்தல்கள் உடன் ஒப்பீடு செய்யும் போது இம்முறை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையிலும் தேர்தல் வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுவதாக தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.