தொடர் மின்தடை காரணமாக பலரது வாழ்வாதாரங்கள் பாதிப்பு (Video)
நாட்டில் ஏற்படும் தொடர் மின்தடை காரணமாகக் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பல பெண் தலைமைத்துவ குடும்பங்கள், மின் ஒட்டுத்தொழிலாளர்கள் மற்றும் குளிர்பான விற்பனையாளர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கையில்,
''தையல் தொழிலை நம்பியே எமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டுவரும் நிலையில், தற்போது தொடர்ச்சியாக மின்தடை காரணமாக தமது தையல் தொழிலை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னைய காலங்களில் மின்சாரம் அற்ற தையல் இயந்திரத்தின் மூலமாக தையல் தொழிலை மேற்கொண்ட போதிலும் தற்போது மின்சாரத்தினை பயன்படுத்துகின்ற தையல் இயந்திரத்தைப் பயன்படுத்துகிறோம். இதன் மூலமாக கூடிய வருமானம் பெறக்கூடிய நிலை இருந்து வந்தது.
தற்போது நாளாந்த வாழ்வாதார பொருட்கள் அனைத்தும் இருமடங்கு, மும்மடங்கு என பல மடங்கு விலை அதிகரித்துள்ள நிலையில் அதை பெறுவதற்கும் இரண்டு நாட்கள் மூன்று நாட்கள் அலைந்து திரியவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது மின்சாரம் அடிக்கடி தடைப்படுவதன் காரணமாக தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் உடுபுடவைகளை வழங்கமுடியாத நிலை காணப்படுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட
அதிகாரிகள் எமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்ல எமது குடும்ப நிலையைக் கருத்தில்
கொண்டும் மின்சாரத்தினை தொடர்ச்சியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளனர்.

