முன்னிலை சோசலிஸ கட்சியின் தேசிய அமைப்பாளர் உட்பட 06 பேர் விடுவிப்பு
முன்னிலை சோசலிஸ கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த நாகமுவ உட்பட 06 பேர் இன்று பல்லேகல்ல இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2021, ஜூலை 07 ஆம் திகதி கொழும்பு, கொம்பனித்தெருவில் அமைந்துள்ள பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு முன்பாக போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டனர்.
ஊழியர்கள் இருவர் அரசியல் ரீதியாக பதவி இடைநிறுத்தம் செய்யப்பட்டமை தொடர்பிலேயே இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தநிலையில் கைது செய்யப்பட்ட அவர்கள் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது பிணையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் பின்னர் காவல்துறையினரால் பல்லேகெல இராணுவ முகாமில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பப்பட்டனர்.
இதேவேளை துமிந்த நாகமுவ தொடர்பில் அவரை மன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோரி அவரது மனைவி, மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று அழைக்கப்பட்ட போது சார்பு வாதங்களை எதிர்வரும் 19ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.