வவுனியாவிற்கான கோவிட் தடுப்பூசி தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு கடிதம்
வவுனியாவிற்கு கோவிட் தடுப்பூசிகள் கிடைக்காமல் காலதாமதமாகுவது தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளருக்கு வவுனியா அரச வைத்திய அதிகாரிகள் சங்க செயலாளர் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
இன்று (16) அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வவுனியா மாவட்டத்திற்கு கோவிட் தடுப்பூசி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகின்றது.
மாகாணத்தில் கோவிட் அச்சுறுத்தல் நிறைந்த இரண்டாவது மாவட்டமாக வவுனியா காணப்படுவதுடன், பல மாவட்டங்களுடன் தொடர்புடைய மாவட்டமாகவும் உள்ளது.
இவ்வாறான நிலையில் இம்மாவட்டத்திற்கு தடுப்பூசி கிடைப்பதில் காலதாமதமாகுவதால் மக்கள் விசனம் அடைந்துள்ளனர்.
எனவே தடுப்பூசியை வவுனியா மாவட்டத்திற்கு பெற விரைந்து நடவடிக்கை எடுத்து தருமாறு கோருகின்றோம் என அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.