சபாநாயகருக்கு அவசர கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ள எதிர்க்கட்சி தலைவர்
தேர்தல் ஆணைக்குழுவில் பணியாற்றிய அதிகாரிகளை திடீரென இடமாற்றம் செய்தல் மற்றும் நீக்கியமை குறித்து விவாதிக்க நாடாளுமன்ற பேரவையை கூட்டுமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகரை கோரியுள்ளார்.
இது தொடர்பில் சஜித் பிரேமதாச கடிதம் ஒன்றை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளார்.
சுயாதீன ஆணைகுழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கு பொறுப்பான நாடாளுமன்ற பேரவை மற்றும் அரசியலமைப்பின் கீழ் அந்த ஆணைக்குழுக்களுக்களில் சேவை செய்யும் அதிகாரிகள், தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகளை மாற்றுவது மற்றும் நீக்குவது குறித்து விவாதிக்கவே நாடாளுமன்ற பேரவை கூட்டப்பட வேண்டும் என்று அவர் கேட்டிருக்கிறார்.
தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் தொடர்பான நடைமுறைகள், சாதாரண அரச அதிகாரிகளை நீக்குதல் மற்றும் இடமாற்றம் செய்வது தொடர்பான விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டவை.
தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகளை ஏனைய நிறுவனங்களுக்கு மாற்றாமல் வைத்திருப்பது அவசியம். ஏனெனில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை உறுதி செய்வதற்கு அவர்களின் நிபுணத்துவம் அவசியம்.
இதுபோன்ற இடமாற்றங்கள் மற்றும் அதிகாரிகளை நீக்குவது எதிர்காலத்தில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களைத் தடுக்கும் என்று சஜித் பிரேமதாச தனது கடிதத்தில் தெரிவித்தார்.
இந்த கடிதத்தில் நாடாளுமன்ற பேரவையின் உறுப்பினர் கபீர் ஹாஷிமும் கையெழுத்திட்டுள்ளார்.