வனராஜா பகுதியில் மரத்திலிருந்த சிறுத்தை உயிரிழப்பு (video)
ஹட்டன் - வனராஜா சமர்வீல் தோட்டப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுத்தை புலியை உயிருடன் பிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக நல்லதண்ணி வனவிலங்குகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமர்வில் தோட்ட பகுதியில் உள்ள மரக்கறி தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த வலையில் சிக்கி காயமடைந்த நிலையிலே காயத்துடன் கம்பியில் அகப்பட்டவாறே சிறுத்தை மரத்தில் ஏறியுள்ளது.
இதனையடுத்து, சிறுத்தையை உயிருடன் பிடிக்கும் நடவடிக்கையில் நல்லதண்ணி வனவிலங்குகள் அலுவலக அதிகாரிகள் மற்றும் பொலிஸார் நடவடிக்கை எடுத்ததுடன், சிறுத்தை ஏறிய மரத்தை வெட்டியுள்ளனர்.
இதன்போது சிறுத்தையின் மீது மரம் விழுந்ததால் சிறுத்தை உயிரிழந்ததாகவும் பிரேத பரிசோதனைக்காக சிறுத்தையை ரந்தெனிகல வனவிலங்குகள் திணைக்களத்துக்கு கொண்டு செல்வதாகவும் வனவிலங்குகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், பொறியில் அமைக்கபட்டிருந்த கம்பியால் சிறுத்தையின் உடலில் காயங்கள்
இருப்பதால் இது தொடர்பில் ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
ஹட்டன் - வனராஜா சமர்வீல் தோட்டப்பகுதியில் உள்ள மரமொன்றில் ஏறிய நிலையில் சிறுத்தையொன்று இன்று பிரதேசவாசிகளால் இனங்காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் வருகைத் தந்ததுடன் சிறுத்தையை பிடிப்பதற்காக நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
குறித்த பகுதியில் அடையாளம் தெரியாதவர்களால் விரிக்கப்பட்ட வலையிலிருந்து தப்பிப்பதற்காகவே சிறுத்தை மரத்தில் ஏறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய சிறுத்தையை உயிருடன் பிடிக்கும் நடவடிக்கையில் நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் மற்றும் பொலிஸார் ஈடுப்பட்டுள்ளனர்.