பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்து சட்டத்தரணி அம்பிகா கருத்து!
பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்பது ஐ.நா மனித உரிமைச் சட்டங்களிற்கோ சாசனங்களிற்கோ அமைய இயற்றப்படவில்லை எனச் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்றைய தினம் (06.04.2023) பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தை இயற்ற வேண்டும்
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை நாடாளுமன்றத்திற்கு தற்போது கொண்டு வருவதில்லை எனவும், தாமதிப்பதாகவும் நீதியமைச்சர் கூறியிருக்கின்றார்.
தற்போது அது நல்ல விடயம் என்றுதான் நாம் கூற வேண்டும். இந்த சட்டமானது இரகசியமான விதத்தில்தான் இயற்றப்பட்டது.
பல உரிமைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் இவ்வாறான சட்டம் கொண்டுவரப்படுவதற்கு முதல் அச்சட்டம் இயற்றப்படும்போது மக்களின் அபிப்பிராயங்கள், சிவில் சமூகங்கள், சட்டத்தரணிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், நிபுணர்கள் ஆகியோரின் அபிப்பிராயங்களையும் எடுத்துத்தான் சட்டத்தை இயற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
