கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் உத்தரவு ஜூலை 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று(22.07.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இரண்டு அரசாங்க நிறுவனங்களிலிருந்து சம்பளம் பெற்று, அதன் மூலம் அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான தொடர் விசாரணையின் அடிப்படையில், சுகீஸ்வர பண்டார ஜூன் 18ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
சம்பள மோசடி
இதற்கிடையில், ஜனாதிபதியின் செலவினத் தலைப்பின் கீழ் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பாக, சிறப்பு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் (CCIB) முறைப்பாடு செய்துள்ளது.

இது தொடர்பான விசாரணையில், பண்டார 2022 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேகச் செயலாளராகப் பணியாற்றியதும், அதே காலகட்டத்தில் ஜனாதிபதி செயலகத்தில் திட்டப் பணிப்பாளர் பதவியை வகித்ததும் தெரியவந்துள்ளது.
இந்த தகவல்களின் அடிப்படையில், ஜனாதிபதியின் செலவினத் தலைப்பின் கீழ் ஒரே நேரத்தில் இரண்டு பதவிகளுக்கு சம்பளம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அவர் கொள்ளுப்பிட்டி பகுதியில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.