திடீரென உயிரிழந்த இளம் யுவதி! சந்தேகம் இருப்பதாக தந்தை அவசர கடிதம்
இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த 21 வயதுடைய யுவதியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து தந்தை சுகாதார அமைச்சுக்கு கடிதமொன்றினை அனுப்பியுள்ளார்.
மகளின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்து, இம்மரணம் குறித்து விசாரணை நடத்துமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மரணத்துக்கான காரணம்
மருத்துவ தரப்பினரின் அலட்சியம் மகளின் மரணத்துக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்றும் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது மகள், கடந்த 3ஆம் திகதி இரத்தினபுரி பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் 13வது வார்டுக்கு மாற்றப்பட்ட நிலையில், நோய் நிலைமை குறித்து முறையாக பரிசோதிக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார்.
தனது மகளுக்கு ஏற்பட்ட கடுமையான நெஞ்சு வலி, வாயிலிருந்து இரத்தம் வடிதல், தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு, கடும் மூச்சுத்திணறல் போன்றவற்றுக்கும் உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படவில்லை என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நாளன்று அவரது ஒட்சிசன் அளவு 85 சதவீதமாக குறைந்ததாகவும், அவசர சிகிச்சைக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாமலும் இருந்ததாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
உடற்கூறாய்வு பரிசோதனை
இதனைத்தொடர்ந்து உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து மாரடைப்பு ஏற்பட்டதன் பின்னரே தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டதாகவும், அங்கு அவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், உடற்கூறாய்வு பரிசோதனை (Histopathological examination) மேற்கொள்ளபடவிருக்கும் நிலையில், நியூமோனியாவே தற்காலிக மரணத்துக்கான காரணம் என நீதித்துறை மருத்துவ அதிகாரி தெரிவித்ததாக தந்தை கூறியுள்ளார்.
எனவே, யுவதியின் மரணம் தொடர்பில், முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தந்தை, உரிய அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சிடம் கோரியுள்ளார்.