இஸ்ரேல் படைகளின் வெளியேற்றம்.. தெற்கு லெபனான் நகருக்குள் நுழைந்த லெபனான் இராணுவம்
அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, தெற்கு லெபனான் நகரான 'ஜவ்தார் அல்-கார்பியே' பகுதியிலிருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் லெபனான் நாட்டு இராணுவ வீரர்கள் தீவிர ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணிகளுக்காக நுழைந்துள்ளனர்.
இந்த நடவடிக்கை, இரு நாடுகளுக்கும் இடையே அமெரிக்கா ஏற்படுத்திய அமைதி ஒப்பந்தத்தின் நடைமுறைச் சாத்தியக்கூறுகளுக்கான முதல் சோதனையாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் திட்டப்படி, தெற்கு லெபனானின் குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து இஸ்ரேலியப் படைகள் படிப்படியாக வெளியேறும்.
அதே வேளையில், அப்பகுதிகளில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரின் ஆயுதங்களைக் பறிமுதல் செய்து, அரசாங்கத்தின் அதிகாரத்தை லெபனான் இராணுவம் முழுமையாக நிலைநிறுத்தும்.
இஸ்ரேலிய இராணுவம்
இந்த திட்டம் 'பைலட் ஸோன் திட்டம்' (எனப் பெயரிடப்பட்டு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவமும் உறுதிப்படுத்தியுள்ளது.

இராணுவம் நகருக்குள் நுழைந்த போதிலும், வெடிக்காத வெடிமருந்துகள் மற்றும் கண்ணிவெடிகளை அகற்றும் பொறியியல் பணிகள் நடைபெற்று வருவதால், பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் வரை மக்கள் ஊருக்குள் திரும்ப வேண்டாம் என லெபனான் இராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது.
நகரத்தின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் முற்றிலும் அழிந்துள்ளதாகவும், எஞ்சிய வீடுகளும் பலத்த சேதமடைந்து வாழ்வதற்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் அப்பட்டினத்தின் மேயர் ஆபெத் எஸ்ஸெடின் கவலை தெரிவித்துள்ளார்.
ஹிஸ்புல்லா அமைப்பை லெபனான் அரசால் முழுமையாக ஆயுதமேற்பாக்கம் செய்ய முடியுமா என்ற சந்தேகத்தை இஸ்ரேல் எழுப்பியிருந்தாலும், நீண்டகால அமைதிக்கு இந்த ஒப்பந்தம் அவசியம் எனத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவ்ன் வொஷிங்டன் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.