சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹின் பிணைக் கோரிக்கைக்கு இணங்கும் சட்டமா அதிபர்!
புத்தளம் மேல்நீதிமன்றத்தில், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை பிணையில் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று கோரும் மனு முன்வைக்கப்படும்போது அதற்கு இணக்கம் தெரிவிக்கவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று ஹிஸாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணை இன்று இடம்பெற்றபோதே சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் இந்த அறிவிப்பை வெளியிட்டது.
ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் பிணைக் கோரிய மனு எதிர்வரும் 28ஆம் திகதியன்று புத்தளம் நீதிமன்றில் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்தநிலையில் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் ஹிஸ்புல்லாஹ் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, ரொமேஸ் டி சில்வா, இந்த வழக்கில் பல சட்ட விவாதங்களை முன்வைக்கவேண்டியுள்ளது
எனினும் தமது கட்சிக்காரரின் நலன்கருதி தாம் இந்த முடிவுக்கு இணங்குவதாக குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புபடுத்தி, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் 2020ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 18 மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



