உயிருக்குப் போராடிய இளைஞருக்கு விலங்கிட்ட பிரித்தானிய பொலிஸார்
பிரித்தானியாவின் சவுதாம்ப்டன் நகரில் கடந்த 2025 டிசம்பரில், 18 வயதான ஹென்றி நோவாக் என்ற மாணவர் விக்ரம் திக்வா என்பவரால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தின்போது, கொலையாளி விக்ரம் திக்வா தான் ஒரு இனவெறித் தாக்குதலுக்கு உள்ளானதாக பொலிஸாரிடம் பொய் கூறியுள்ளார்.
அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள காணொளி
இதனை உண்மை என நம்பிய இரண்டு பொலிஸார், கத்திகுத்துப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஹென்றியைக் குற்றவாளியாகக் கருதி அவருக்குக் கைவிலங்கிட்டுள்ளனர்.

"என்னால் மூச்சுவிட முடியவில்லை" என்று ஹென்றி கதறியும் அதிகாரிகள் அவருக்கு முதலுதவி வழங்காமல் அலட்சியம் காட்டியது பொலிஸாரின் உடல் கெமரா பதிவுகள் மூலம் தெரியவந்தது.
இந்த காணொலி பிரித்தானியா முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் போராட்டங்களையும் ஏற்படுத்திய நிலையில், கடந்த மாதம் கொலையாளிக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒழுங்கீன விசாரணை
இந்தச் சூழலில், பாதிக்கப்பட்ட நபருக்கு அவசர மருத்துவ உதவி வழங்கத் தவறியது, அத்துமீறி விசை மற்றும் கைவிலங்குகளைப் பயன்படுத்தியது மற்றும் கடமை தவறியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மீது தற்போது "கடுமையான ஒழுங்கீன விசாரணை" தொடங்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் பொலிஸார் நடத்தைக்கான சுதந்திரமான அமைப்பு (IOPC) புதன்கிழமை அறிவித்துள்ளது.

இந்த அலட்சியப் போக்கிற்குப் பின்னால் இனம் அல்லது மதம் சார்ந்த பாகுபாடுகள் ஏதேனும் காரணங்களாக இருந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மகனின் மரணத்தில் பொலிஸாரின் செயல்பாடு "மனிதநேயமற்றது" என்று ஹென்றியின் தந்தை விமர்சித்துள்ள அதே வேளையில், இந்தச் சம்பவத்தை யாரும் வெறுப்புணர்வைத் தூண்டுவதற்கோ அல்லது சமூகப் பிரிவினையை உருவாக்குவதற்கோ பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.