13 வருடங்களாகியும் முன்னெடுக்கப்படாத லசந்தவின் கொலை விசாரணை! நல்லாட்சியின் மீதும் குற்றச்சாட்டு!
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை செய்யப்பட்டு 13 வருடங்களாகிய நிலையில், அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதியன்று தமது அலுவலகத்துக்கு செல்லும் வழியில் அவர் கொல்லப்பட்டார்.
லசந்த விக்கிரமதுங்கவின் நினைவுத்தின நிகழ்வுகள் இன்று பொரல்ல மயானத்தில் இடம்பெற்றன.
மட்டக்களப்பில் தமிழ் ஊடகவியலாளர்களும் லசந்த விக்கிரமதுங்கவின் நினைவு நிகழ்வை இன்று நடத்தினர்.
இதன்போது கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம், தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பாதுகாப்பு செயலாளராக இருந்தபோதே லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்டார்.
எனவே அந்த கொலை தொடர்பில் அவர் விசாரணையை மேற்கொள்ளவேண்டும் என்று சாணக்கியன் கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை இந்த கொலை தொடர்பில் நல்லாட்சி அரசாங்கமும் விசாரணையை முன்னெடுக்கவில்லை என்று சாணக்கியன் குற்றம் சுமத்தினார்.
எனினும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்த முன்னாள் அமைச்சர் எரான் விக்கிரமரட்ன, முன்னைய அரசாங்கத்தில் எந்தவொரு அமைச்சரும் லசந்த விக்கிரமதுங்கவின் விசாரணையை நசுக்க முயற்சிக்கவில்லை என்று குறிப்பிட்டார்
எனினும் ஏன்? நீதித்துறையில் இந்த விடயம் முன்னெடுக்கப்படவில்லை என்பது தமக்கு தெரியவில்லை என்றும் எரான் விக்கிரமரட்ன குறிப்பிட்டார்.