நாட்டின் உடனடி டொலர் பற்றாக்குறையை ஈடுசெய்ய 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை
2021 ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் சிறப்பு வரைதல் உரிமை வசதியின் கீழ் சர்வதேச நாணய நிதியத்திலிருந்து 800 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கங்களை பெற்றுக் கொள்ள இலங்கை விண்ணப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய ஒதுக்கீட்டின் கீழ், இலங்கை சுமார் 800 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஒதுக்கங்களைப் பெற வேண்டும் என்று திறைசேரியின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எஸ்.டி.ஆர் என்ற சிறப்பு வரைதல் உரிமை என்பது சர்வதேச உறுப்பு சொத்தாகும். இதனை சர்வதேச நாணய நிதியம் 1969 இல் அதன் உறுப்பு நாடுகளின் உத்தியோகபூர்வ இருப்புகளுக்காக உருவாக்கியது.
எஸ்.டி.ஆரின் மதிப்பு அமெரிக்க, யூரோ, சீன ரென்மின்பி, ஜப்பானிய யென் மற்றும் பிரிட்டிஷ் ஸ்டெர்லிங் பவுண்ட்ஸ் ஆகிய ஐந்து நாணயங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது.
இந்த நிலையில் அடுத்த சில மாதங்களில் நாட்டின் வெளிநாட்டு இருப்புக்களை உறுதிப்படுத்த எஸ்.டி.ஆர், இலங்கை மத்திய வங்கியில் இருப்பு வைப்பு செய்யப்பட வேண்டும் என்று மத்திய வங்கியின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த மாதத்தில் 1 பில்லியன் அமெரிக்க டொலர் இறையாண்மை பத்திரத்தை திருப்பி செலுத்த வேண்டியிருப்பதால், வெளிநாட்டு இருப்புக்களை உறுதிப்படுத்த எஸ்.டி.ஆர் மிக முக்கியமானதாக இருக்கும் என்று அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, நாட்டின் வெளிநாட்டு இருப்பு 4.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது.
இதனையடுத்து, நாட்டின் உடனடி டொலர் பற்றாக்குறையை ஈடு செய்ய குறைந்தபட்சம் 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.
மேலும், சிறப்பு வரைதல் உரிமையில் இருந்து ஒதுக்கம் கிடைத்த பின்னர் இலங்கை ஏனைய நாடுகளுக்கு டொலர்களை செலுத்த முடியும் என்றும் மத்திய வங்கி அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.