கடற்படை முகாமிற்காக காணிகளை சுவீகரிக்கும் நில அளவீட்டு நடவடிக்கை: மக்கள் எதிர்ப்பு
வட பகுதியில் காணி அபகரிப்பு பிரச்சினை தொடர்ந்து வருகின்றது.
இதற்கமைய காரைநகர் - நீலங்காடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான 40 ஏக்கர் காணியை இலங்கை எழாறா கடற்படை முகாமிற்கு அளவிடுவதற்கு மக்கள் பாரிய எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
குறித்த காணியை அளவிடுவதற்கு நில அளவைத் திணைக்களத்தினர் இன்று (13.12.2022) வருகை தந்தபோது அப்பகுதியில் கூடிய பொதுமக்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஒன்று கூடி தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
அதனையடுத்து அங்கு வந்த நில அளவைத் திணைக்களத்தினர், மக்களுக்கு சொந்தமான
காணியை கடற்படையினருக்கு அளவிடுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று எழுதி
ஒப்பமிடப்பட்ட எழுத்து மூலமான ஆவணத்தை பெற்றுக்கொண்டு அங்கிருந்து நகர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் காணியின் உரிமையாளர்கள், சமூகமட்ட அமைப்பினர், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள 'கோட்டாபய கடற்படை கப்பல் ' கடற்படை முகாமிட்காக காணிகளை சுவீகரிக்கும் நில அளவீட்டு நடவடிக்கை இன்று(13.12.2022)முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிந்த காணி உரிமையாளர்கள் பலர் கடற்படை முகாமிற்கு முன்னால் ஒன்றுகூடி எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் நிலங்களை கடந்த 13 வருடங்களாக ஆக்கிரமித்து பாரிய கடற்படை முகாம் ஒன்றினை அமைத்துள்ள கடற்படையினர் அந்த காணிகளை படை முகாமின் தேவைக்காக கடந்த சில வருடங்களாக நிரந்தரமாக சுவீகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பலதடவைகள் நில அளவை திணைக்களத்தால் அளவீடு செய்ய எடுத்த முயற்சிகள் காணி உரிமையாளர்களான மக்களினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.
காணி எடுத்தற் சட்டம் 05 ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவின் பிரகாரம் காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கட்டளை நிமித்தம் 2017ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி வெளியாகிய வர்த்தமானியின் பிரகாரம் கரைத்துறைபற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வட்டுவாகல் மற்றும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியிலுள்ள 271.62 ஹெக்டெயர் விஸ்தீரனமுடைய காணி கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் காணி உரிமையாளர்களான மக்களை காணி ஆவணங்களோடு வருகைதந்து கடற்படை முகாமுக்கு காணியை வழங்க அளவீடுகளை செய்ய எல்லைகளை அடையாளம் காட்டுமாறு நில அளவை திணைக்களத்தால் பல தடவைகள் காணி உரிமையாளர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டு அளவீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட ஏற்பாடாகியுள்ளது.
இதற்க்கு காணி சுவீகரிப்பு தொடர்ச்சியான மக்களின் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தமையால் அளவீட்டு பணிகள் இடம்பெற்றிருக்கவில்லை.
இந்த நிலையில் இன்று(13)அளவீட்டு பணிகள் இடம்பெறவுள்ளதாகவும் இதற்க்காக சிறப்பான நில அளவையாளர் குழு ஒன்று கொழும்பிலிருந்து முல்லைத்தீவுக்கு வருகைதரவுள்ளதாகவும் அறிந்த சில காணி உரிமையாளர்கள் அரசாங்கத்திற்கு காணியினை வழங்குவதற்கு எதிர்பினை தெரிவித்துள்ளனர்.
இதன்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன்,சிவநேசன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் காணி உரிமையாளர்களோடு
இணைந்து இந்த எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.