வடக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானி குறித்து ஜனாதிபதிக்கு சுமந்திரன் கடிதம்
வர்த்தமானி அறிவித்தல் மூலம் வடக்கு மக்களின் காணிகளைப் பிடுங்கும் நடவடிக்கை ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கின்ற வடக்கு - தெற்கு உறவை மேலும் பாதிக்கச் செய்யும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எம்.ஏ.சுமந்திரன் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பான வர்த்தமானியை மீளக் கை வாங்குமாறு கோரி 'காணிகள் நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் 28.03.2025 திகதியிட்டு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி பிரசுரம்' என்ற தலைப்பில் அமைந்த இந்தக் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பவை வருமாறு,
மேற்சொன்ன வர்த்தமானி இல: 2,420 சம்பந்தமாக தங்களது கவனத்தை ஈர்க்கின்றேன். இந்த அறிவித்தலின் பிரகாரம் தங்களது உரித்து சார்ந்த கோரிக்கைகளை உரிமையாளர்களும் மற்றவர்களும் வர்த்தமானியின் திகதியிலிருந்து 3 மாத காலங்களுக்குள் முற்படுத்த வேண்டும்.
தெளிவான உரித்தாவணங்கள்
இல்லாவிடில் அந்தக் காணிகள் அக்கட்டளைச் சட்டத்தின் பிரிவு 5(1) இன் கீழ் அரச காணி என்று பிரகடனப்படுத்தப்படும். இந்தக் கட்டளைச் சட்டம் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களால் எமது மக்கள் நூற்றாண்டுகளாக பாவித்து வந்த, ஆனால் தெளிவான உரித்தாவணங்கள் இல்லாத காணிகளை பறிப்பதற்காக உருவாக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
இச் சட்டம் எப்போதோ அகற்றப்பட்டிருக்க வேண்டும். எது, எப்படியாக இருப்பினும் வடக்கு, கிழக்கு மக்கள் கடந்த 50 ஆண்டு காலத்தில் பல தடவைகள் இடம்பெயர்ந்து இன்னமும் முழுமையாக தங்கள் நிலங்களில் மீள் குடியேற்றப்படாத நிலையில் இருக்கின்றார்கள்.
கீழே கூறப்படும் காரணங்களுக்காகவும் வேறும் காரணங்களுக்காகவும் இந்தச் சட்டம் தற்போதைய சூழ்நிலையில் உபயோகப்படுத்தப்படக் கூடாது.
1. பல தொடர்ச்சியான இடம்பெயர்வுகள் சாதாரண வாழ்வை குழப்பியுள்ளதோடு, இன்னமும் அது திருத்தியமைக்கப்படவில்லை.
2. கட்டாய இடப்பெயர்வுகளாலும் இந்தப் பிரதேசங்களை அழித்தொழித்த சுனாமி பேரலையினாலும் மக்கள் தமது உறுதிகளையும் மற்றைய ஆவணங்களையும் இழந்துள்ளனர்.
3. இந்தக் காணிகளின் உரித்தாளர்கள் பலருக்கு பல வருடங்களுக்கு முன்னரே மரித்த முன் உரித்தாளர்களிடம் இருந்து முறையாக உரிமை மாற்றம் செய்யப்படவில்லை.
4. பல இலட்சக்கணக்கான மக்கள் போர்ச் சூழலில் இருந்து தப்பி வெளி நாடுகளில் அகதிகளாக முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வாழ்ந்து வருகின்றனர்.
வடக்கு, கிழக்கு மக்களின் உரிமை
இந்தியாவின் தமிழ் நாட்டில் ஐ. நா. அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரின் அனுமதியோடு ஒரு இலட்சமளவிலானவர்கள் வாழ்கின்றார்கள்.
இந்தச் சூழ்நிலையில் இந்த வர்த்தமானியில் கேட்கப்பட்வாறு தமது கோரிக்கைகளை முன்வைப்பதென்பது இந்த மக்களால் செய்ய முடியாத ஒன்றாகும்.
இந்த நடவடிக்கை தொடருமாக இருந்தால் வடக்கு, கிழக்கு மாகாணத்தின் தமிழ் மக்கள், அந்த மாகாணத்தின் மக்கள் என்ற ரீதியில் சட்டத்தின் உரித்தோடு தமது நிலங்களை மீளவும் பெற்றுக்கொண்டு அவற்றைத் தாமாக ஆட்சி செய்யும் உரிமையை இழந்து விடுவார்கள்.
இது வடக்கு, கிழக்கு மக்களின் உரிமைகளை மதிக்காத செயலாகவும், ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கின்ற வடக்கு - தெற்கு உறவை மேலும் பாதிக்கப் பண்ணுவதாகவும் அமையும்.
உண்மையாகவே நாட்டைக் கட்டியெழுப்ப விரும்புகின்ற எந்த அரசும் இதைத் தவிர்க்க வேண்டும். ஆகையால் காலதாமதமின்றி இந்த வர்த்தமானியை மீளக் கை வாங்குமாறு அவசரமாகக் கோருகின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri
