ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையும் இல்லாமல் போகும்! கிரியெல்ல எச்சரிக்கை
நாட்டின் அரசமைப்பின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்தால், அனைத்து அரச நிறுவனங்களும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
ஒத்துழைப்பு வழங்காவிட்டால் குறித்த அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு மூன்று வருடங்கள் சிறைத்தண்டனையைப் பெற்றுக் கொடுக்க முடியும், என்பதுடன் தேர்தலை நடத்தாவிட்டால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையையும் இழக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (21.02.2023) உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கை
மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் நிதி அமைச்சு நிதி பணம் வழங்க முடியாது என்று கூறுகின்றது.
அதேவேளை அச்சக பிரதானி தேர்தலுக்கான ஆவணங்களை அச்சிட முடியாது என்று கூறுகின்றார்.
இத்தகைய நிலையில் காலை வாரி விடாமல் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது.
அதற்கான நடவடிக்கைகளை சபாநாயகர் மேற்கொள்ள வேண்டும். உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இடம்பெற்று கட்டுப்பணமும் செலவிடப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியிலான பிரச்சினை
தேர்தலில் போட்டியிட அரச ஊழியர்கள் தங்கள் பதவிகளை இராஜிநாமா செய்துள்ளனர். அந்த நிலையிலேயே இன்று தேர்தல் நம்பிக்கையற்றதாக காணப்படுகின்றது.
இதனால் பாரிய பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றது. சர்வதேச ரீதியிலும் பெரும் பிரச்சினையை எதிர்நோக்க நேரிடும். ஐ.சீ.சீ.பி.ஆர். சட்டத்தின் கீழ் தேர்தல் நடத்தவில்லை என்றால் எங்களுக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இல்லாமல் போகும்.
இப்போது ஜப்பான், ஜேர்மன்
போன்ற நாடுகள் எம்மிடமிருந்து விலகிச் செல்ல முற்படுவதைக் காண முடிகின்றது.
இவ்வாறான நிலையில் அரசாங்கம் என்ன செய்கின்றது என்று கேட்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
