குருந்தூர் மலையில் திடீரென ஒன்றுகூடிய அரச அதிகாரிகள்(Photos)
முல்லைத்தீவு - குருந்தூர்மலை பிரதேசத்திற்கு புத்தசாசன அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட திணைக்கள உயர் அதிகாரிகள் திடீர் களவிஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் 17.10.23 இன்று குறித்த புத்தசாசன அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன, ஜனாதிபதி செயலக வடமாகாண இணைப்பாளர் எல்.இளங்கோவன் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் உள்ளிட்ட மேலதிக அதிகாரிகள் சென்றுள்ளனர்.
கடந்த மாதம் இறுதியில் குருந்தூர் மலை விகாரை அமைந்துள்ள தொல்பொருள் காப்புப் பகுதிக்கு சொந்தமில்லாத காணியில் இருந்து 3 ஏக்கர் காணியை ஒதுக்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன இளைஞர் பாரம்பரியம் மற்றும் நவீன குடிமக்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு முன்மொழிந்திருந்தார்.
தமிழ்மக்களின் பூர்வீக காணி
இதன் பின்னர் 17.10.2023 இன்று களவிஜயம் மேற்கொண்டு குருந்தூர் மலையினை பார்வையிட்டுள்ளதுடன் குருந்தூர் குளம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினால் எல்லைப்படுத்தப்பட்ட பகுதிகளை பார்வையிட்டுள்ளார்.
குருந்தூர் மலைக்காக தொல்பொருள் திணைக்களம் தமிழ்மக்களின் பூர்வீக காணிகளை
எல்லைப்படுத்தியுள்ளதா என விவசாயிகள் பல்வேறு தடவைகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில், மலையினை அண்டிய தமிழ்மக்களின் பூர்வீக காணிகளில் எதுவும் செய்யமுடியாத நிலை காணப்படுவதாகவும் தொல்பொருள் திணைக்களமும் வனவளத்திணைக்களமும் தங்கள் காணிகளை எல்லைப்படுத்தியுள்ள நிலையில் மீள்குடியேற்றத்திற்கு பின்னர் குறிப்பாக 2012 ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் விவசாய செய்கையினையோ மீள்குடியேற்றத்தினையோ செய்யமுடியாத நிலையில் காணப்படுவதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.






