திருகோணமலை மக்களுக்கான முக்கிய அறிவித்தல்
நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற் கொண்டு எமது மாவட்ட மக்கள் அனைவரும் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என திருகோணமலை குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஏ. முபாரக் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்றது கோவிட் வைரஸ் தொற்று
காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். மேலும்
தற்போது முஸ்லிம்களுக்காகப் புனித ரமழான் மாதம் வந்தடைந்து இருக்கின்றது.
இந்த சூழ்நிலையில் பொதுமக்களாகிய நாங்கள் நாட்டின் நிலைமைகளைக் கருத்திற் கொண்டு மிகவும் அவதானமாகச் செயல்பட வேண்டிய சந்தர்ப்பத்தில் உள்ளோம்.
இதனடிப்படையில் குச்சவெளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட தென்னமரவாடி, புல்மோட்டை, திரியாய், புடவைக்கட்டு, குச்சவெளி, கும்புறுப்பிட்டி, இறக்கக்கண்டி, நிலாவெளி, இக்பால் நகர், பெரிய குளம் வரையே உள்ள மக்கள் மிகவும் கவனமாகச் செயற்பட வேண்டிய நிலையில் இருக்கின்றனர்.
எமது குச்சவெளி பிரதேசத்தில் இதுவரையில் எமது பகுதியில் குறைவான வைரஸ் தாக்கம் தான் காணப்படுகின்றது. இருந்தும் மக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டிய நிலையில் உள்ளோம்.
எங்களின் கவனயீனம் மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்க நேரிடும். ஆகவே பொதுமக்களாகிய நீங்கள் அத்தியாவசிய தேவைகளை மட்டும் பூர்த்தி செய்வதற்காக வெளியில் செல்ல வேண்டும்.
அதை விடுத்து பெருநாளை முன்னிட்டு ஆடைகளைக் கொள்வனவு செய்வதற்காக வீதிகளிலும், கடைகளிலும் தேவை இல்லாமல் அலைந்து திரிவதை முற்றாகத் தவிர்க்க வேண்டும்.
அத்துடன் நாட்டின் சட்ட திட்டங்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். மேலும் தற்போது நாட்டில் நடைபெறுகின்ற நிலைமையினை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டிய முக்கிய கடப்பாடு உங்களிடமே காணப்படுகிறது.
ஆகவே எமது சமூகத்தின் நலன் கருதி சுகாதாரத் துறையினரால் கடைப்பிடிக்கச் சொல்லுகின்ற அனைத்து விடயங்களையும் கவனமாகச் சிந்தித்துச் செயலாற்றவும்.
அத்துடன் தேவையற்ற கூட்டங்கள், வீதியில் ஒன்று கூடல், இப்தார் நிகழ்ச்சிகள், வீண் விளையாட்டுக்கள், பெண்கள் வெளியில் வருதல் போன்ற விடயங்களை முற்றாகத் தவிர்த்தல் மிகவும் சிறப்பாக இருக்கும்.
நாம் வாழுகின்ற இதே பிரதேசத்தில் சகோதர மத சொந்தங்கள் அவர்களுடைய பெருநாட்களைத் தியாகத்துடனும், சிறந்த சிந்தனைகளுடனும் அமைதியாகக் கழித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு நாமும் செயல்பட வேண்டும்.
குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட வியாபார நிலைய உரிமையாளர்கள் இலாப நோக்கினை தூரவைத்து விட்டு சமூக நோக்கு, மக்களின் பாதுகாப்பு போன்ற விடயங்களுடன் செயல்பட வேண்டும்.
விளையாட்டு கழகங்கள், சமூக நிறுவனங்கள், ஊடகவியாளர்கள், இளைஞர்கள் மிகவும் பொறுப்புடனும் அவதானமாகவும் முன்னின்று நமது சமூகத்தை அவதானித்துக் கொள்ள வேண்டும். பிழைகள் ஏதும் இடம்பெற்றால் தீர்க்கமாகவும், சிந்தித்தும் செயல்பட வேண்டும்.
இந்தப் பெருநாளை இருக்கின்ற சிறந்த ஆடைகளைப் பயன்படுத்தி மிகவும் எளிமையாகக் கொண்டாடுவோம். இதைச் சிறப்பாக கடைப்பிடித்தால் அடுத்த ஹஜ்ஜுப் பெருநாளைச் சிறப்பாகக் கொண்டாடலாம்.
மேலும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் யாருக்காவது உதவிகள் ஏதாவது
தேவைப்பட்டால் எந்நேரத்திலும் என்னைத் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளுமாறு
கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.